* ஊவா மாகாண சபை உறுப்பினர் வேலாயுதம் தெரிவிப்பு
அரசியலும் அரசறிவியற் கருத்துகளும் வெகுவிரைவாக வளர்ந்து வரும் காலமிது. தொடர்புசாதனங்கள் வளர்ச்சியின் காரணமாக கருத்துப் பரிமாற்றங்களும் வேகமடைந்து ஆராய்ச்சி துறைகளும் அதற்கான கற்கைநெறிகளும் வளர்ச்சியடைந்தன. அந்த வகையில் எமது மலையக சூழலில் இன்னும் அதன் வளர்ச்சி மந்த கதியிலேயேயுள்ளது. மலையக சமூகம் கல்வி அபிவிருத்தியில் மாற்றம் கண்டு வருகின்ற போதிலும் அரசறிவியற் கல்வியில் போதிய மாற்றங்களைக் காண முடியவில்லையென்று இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் ஊவா மாகாண சபை உறுப்பினருமான கே.வேலாயுதம் தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை பதுளை ஒனிக்ஸ் விடுதியில் பவர் நிறுவனம் பிரட்ரிக் ஈபர்ட் மன்றத்துடன் இணைந்து ஆரம்பித்துள்ள பெருந்தோட்டத்துறை இளம் தலைவர்களுக்கான 170 மணித்தியாலங்கள் உள்ளடக்கிய 4 மாத பதினாறு நாள் விசேட வதிவிட பயிற்சிநெறியின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
முகவரியற்ற எமது மலையக சமூகத்தின் அரசியல் பிரதிநிதித்துவம் அதிகரித்துள்ள போதும் அரசறிவியற் துறையில் இளைஞர்களுக்கும் மக்களுக்கும் போதுமான அறிவில்லாத காரணமாக எமது சமூகத்தின் சகலதுறை வளர்ச்சிகளும் மந்த கதியிலேயே நகர்கின்றது.
எமக்கே உரித்தான சிவில் மற்றும் அரசறிவியற் முறைமைகளையும் வாக்குரிமையின் முக்கியத்துவத்தையும் உணராதவர்களாகவிருக்கின்றோம். சொற்ப சலுகைகளுக்காக எமது வாக்குகளை விலைக்கு வாங்குவோரிடம் அடகு வைக்கும் ஓர் சமூகமாக காணப்படுகின்றோம்.
எமது அடிப்படைத் தேவைகளையோ உரிமைகளையோ சமூக கட்டமைப்புகளின் பற்றாக்குறைகளையோ நாம் அறியாதவர்களாக அது அவ்வாறே குவிந்து கிடக்க வெறும் அரசறிவியற் பிரதிநிதித்துவத்தின் கீழ் வெறும் தங்கி வாழும் சமூகமாக இருந்து வருகின்றோம்.
ஏனெனில், தற்போது எமது அரசியல் பிரதிநிதித்துவம் எமது தேவைகளையும் அபிலாஷைகளையும் பூர்த்தி செய்வதை விடுத்து தமது இருப்புகளை தக்கவைத்துக் கொள்வதற்காக மலையக மக்கள் மத்தியில் பாகுபாடுகளை ஏற்படுத்துவது மாத்திரமன்றி, அவர்கள் தொடர்ந்தும் ஓர் தங்கி வாழும் சமூகமாக நடத்தி வருகின்றார்கள். இதற்கு குறிப்பாக எமது இளைஞர், யுவதிகள் மத்தியில் போதிய அரசியல் விழிப்புணர்வு அரசறிவியற்கல்வி இன்மையே காரணம் எனலாம்.
எனவே, எமது சமூகம் அரசறிவியற் துறையில் தெளிவு பெற்றவர்களாக மாற வேண்டியது அவசியமானது. ஜனநாயகம், நல்லாட்சி, நல்ல தலைமைத்துவம் போன்றன பற்றி தெளிவான அறிவினையும் நாளாந்த சட்ட திட்டங்களையும் தெரிந்துவைத்திருத்தல் வேண்டும்.
அரசியல் சித்தாந்தம், கட்சி அரசியல், ஜனநாயக அரசியல், தலைமைத்துவம், அதன் செயற்பாடுகள், சமூக தேவைகள், அபிவிருத்தி செயற்பாடுகள், ஆளுமை விருத்தி, சிறந்த பங்கேற்பு போன்ற துறைகளில் அவ்வப்போது ஏற்படும் மாற்றங்கள், அணுகுமுறைகள் போன்றன பற்றி அறிவைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அப்போதே நாம் நமக்காக சுயமாக சிந்தித்து சொந்த கால்களில் நின்று செயற்படுகின்ற நிலையை உருவாக்க முடியும். இதனூடாகவே மலையகத்துக்கென்ற அரசியல் கலாசாரத்தை உருவாக்க முடியும். தலைவர்களுக்காக நாம் என்ற நிலை மாறி எமக்காக தலைவர்கள் என்ற நிலை உருவாகும். மலையகம் ஓர் புதிய புரட்சியில் ஈடுபட முடியும்என்றார்.
இந்நிகழ்வில் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.