* அமைச்சர் சந்திரசேகரன் தெரிவிப்பு
மலையக தமிழ் மக்களின் பொதுவான வாழ்வாதாரப் பிரச்சினைகளைத் தீர்க்க இன்றுங்கூட ஆக்கபூர்வமான திட்டங்கள் முன்னெடுக்கப்படாத நிலையில் சப்ரகமுவ பிரதேசத்தில் சிறுபன்மையினராக வாழ்கின்ற நம் மக்களின் பதுகாப்புத் தொடர்பில் எழுந்துள்ள அச்சுறுத்தலை அடியோடு அகற்றி அவர்களுடைய தனித்துவத்தை பாதுகாக்க வேண்டிய கடமையுணர்வோடு இந்த மாகாண சபைத் தேர்தலைச் சந்திக்க மலையக மக்கள் முன்னணி களம் இறங்கியிருக்கின்றது என்று அமைச்சரும் கட்சியின் தலைவருமான பெ.சந்திரசேகரன் காவத்தை நீலகாமம் தோட்ட ஐந்தாம் பிரிவு மக்களிடையே உரையாற்றும் போது கூறினார்.
மேற்படி தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய கலாசார மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவத்தைத் தொடர்ந்து திரண்டிருந்த மக்களிடையே அவர் பேசும் போது மேலும் குறிப்பிட்டதாவது;
"வீட்டு வசதி, கல்வி, தொழில் வாய்ப்பு, அரசியல் ரீதியாக இந்தப் பிரதேச தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பாதுகாப்பு மற்றும் தனித்துவத்தைப் பற்றி நாங்கள் என்ன கருத்தைக் கூறப்போகின்றோம் என்பதைக் கேட்பதற்காக ஆவலுடன் இருக்கின்றீர்கள் என்பதை நான் அறிவேன்.
மலையக மக்கள் முன்னணி இந்த மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட காரணம் என்ன என்ற கேள்வியும் உங்கள் மனங்களில் எழுந்துள்ளது.
நுவரெலியாவில் எங்களுடைய அமைப்பை நாங்கள் உருவாக்கிய போது மக்களை அணிதிரட்டி, எங்களுடைய அரசியல் சிந்தனைக்கு பலம் சேர்த்து தூய்மையான அரசியல் கொள்கையை முன்னெடுப்பதே முக்கிய நோக்கமாக இருந்தது.
அந்தநேரத்தில் சௌமியமூர்த்தி தொண்டமான் தலைவராக இருந்த காலத்திலேயே இந்தக் கட்சியை நாங்கள் வளர்த்தெடுத்தோம். தோட்டப் பகுதிகளுக்குள் நுழைய முடியாத நிலை காணப்பட்டது.
இ.தொ.கா.விலிருந்து அஸிஸ் பிரிந்த காலத்திலேயே இ.தொ.கா.விற்கு எதிரானவர்கள் வந்தால் அடித்து விரட்டுங்களென எவ்வாறு பிரசாரம் செய்தார்களோ அதே நிலைதான் எமக்கும் ஏற்பட்டிருந்தது.
பெரும்பான்மைக் கட்சிகளினால் மட்டுமல்ல, நம்மைச் சார்ந்தவர்களாலேயே நாம் பெரும் எதிர்ப்புகளையும் வன்முறை கலாசாரத்தையும் சந்தித்தோம். ஆனால், எங்களிடமிருந்த ஒரேயொரு ஆயுதம் தூய்மையான, உறுதியான அரசியல்தான். நாங்கள் மக்கள் மத்தியில் அதனைத் தெளிவுபடுத்தினோம். எங்களது நிலைப்பாட்டை மக்களுக்கு அவர்களுடைய அடிமனதிலே பதிகின்ற விதத்தில் எடுத்துச்சொன்னோம்.
அவர்கள் கைகொடுக்கத் தயாரானார்கள். இந்த ஸ்தாபனத்தைக் கட்டிக்காத்து பலம் சேர்த்தார்கள். அதனடிப்படையில் தான் மலையக மக்கள் முன்னணியை பெரும் ஸ்தாபனமாக நாம்மால் வளர்த்தெடுக்க முடிந்துள்ளது.
ஆகவேதான், எங்களுக்கு பலம் சேருங்கள் என்று சொல்கின்றோம். இந்த மாகாண சபைத் தேர்தலில் மண்வெட்டிச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றி அடையவைப்பதன் மூலம் எல்லாப் பிரச்சினைகளும் தீர்த்து விடும் என்று நான் சொல்லவில்லை. எங்களுக்கு வாக்களித்துவிட்டால் ஒரேநாளில் இந்தப் பிரச்சினைகளையெல்லாம் தீர்த்துவிடுவோம் என்ற வாக்குறுதியையும் நாம் கொடுக்கவில்லை.
நாம் பெறப்போகும் வெற்றி மூலம் இந்த பிரதேச மக்களைப் பற்றிப் பேசுகின்ற தகுதியை நாம் அடைய வேண்டும். இந்தப் பிரதேச மக்கள் எந்தளவிற்கு பின் தள்ளப்பட்டிருக்கின்றார்கள். எந்தளவிற்கு ஒடுக்கப்பட்டிருக்கின்றார்கள். காலத்திற்குக் காலம் பதவியேற்கும் அரசாங்கங்களினால் நிராகரிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை உலகத்திற்கு எடுத்துச் சொல்கின்ற தகுதி நமக்கு ஏற்பட வேண்டும்.
மலையகத்திலே 15 இலட்சம் இந்திய வம்சாவளி மக்கள் வாழ்கின்றார்கள். இந்த மக்களுக்கு பல்வேறுவிதமான பிரச்சினைகள் இருக்கின்றன.
சப்ரகமுவ பிரதேச மக்கள் ஏனைய பிரதேச மக்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகளோடு வேறு பல பிரச்சினைகளையும் சந்திக்க வேண்டியிருக்கிறது.
தோட்டத் தொழில்துறை நம்பிக்கை அளிப்பதாக இல்லை. வேறு தொழில் வாய்ப்புகள் உருவாக வழியில்லை. வீட்டு வசதிகள் சராசரி நிலைக்கும் குறைவாகவே இருக்கின்றன. வாழ்க்கைப் பிரச்சினைகள் பெரும் சுமையாக இருக்கின்றன. தமது பிள்ளைகள் தாய்மொழியில் கல்வி கற்க முடியாத நிலை இருக்கின்றது.
நாட்டின் ஒரு பகுதியில் கொடூர யுத்தம் நடைபெற்றுக் கொண்டிக்கின்றது. ஆனால், அங்குள்ள மக்களுக்கு தமக்கென சொந்த நிலமும் பிரதேசமும் இருப்பதால் யுத்த சூழ்நிலையிலும் கூட நம்பிக்கையோடு வாழ்கின்றார்கள்.
மலையக தமிழர்களோ அடிப்படை உரிமைகள் ஏதுமில்லாமல் ஏக்கத்தில் ஆழ்ந்து போயிருக்கிறார்கள்.
சப்ரகமுவ மாகாண சபைத் தேர்தல் பிரசாரத்தை உங்களுடைய தோட்டத்திலிருந்து ஆரம்பிக்கின்றோம். நாம் சொல்வதெல்லாம் மலையக மக்கள் முன்னணி பலம் பெற்ற ஸ்தாபனமாக இருக்க வேண்டும். மலையகத்தில் அங்கீகாரம் பெற்ற அமைப்பாக மாற வேண்டும். அதன் மூலம் மலையகத்தின் தலைவிதியை மாற்றுகின்ற சக்தியை நாம் பெற வேண்டும்' என்றார்.