"கடல்கோள் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு யூ.என்.டி.பி. உதவ வேண்டும்'
அம்பாறை மாவட்டத்தில் கடல்கோள் அனர்த்தத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டு மீள்குடியேற்றப்பட்டுள்ள சின்னமுகத்துவார மக்களின் வாழ்வாதார பொருளாதாரத்தை மேம்படுத்த ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் (யூ.என்.டி.பி.) அதிகளவு திட்டங்களை செயற்படுத்தி தரவேண்டும் என தீவுக்காலை பல் தேவைக் கட்டிடத்தில் பயன்தரும் மரங்களை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதேச செயலாளர் எஸ்.கரன் தெரிவித்தார்.
அக்கரைப்பற்று 8 கிராம அபிவிருத்தி சங்கம் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்ட அனுசரணையுடன் கொரியன் சூழலைப் பாதுகாக்கும் நிதியம் இயற்கை வளங்களை மீள்நிலைத்திருக்க செய்யும் செயற்றிட்டத்தின் கீழ் 5 இலட்சம் ரூபா பெறுமதியான மா, தென்னை, தேக்கு போன்ற மரக்கன்றுகளை வழங்கும் நிகழ்வு தீவுக்காலை பல்தேவைக் கட்டிடத்தில் அக்கரைப்பற்று 8 கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் தலைமையில் நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட ஆலையடி வேம்பு பிரதேச செயலாளர் எஸ்.கரன் தொடர்ந்து பேசுகையில்;
இன்று உலக நாடுகளையே அபிவிருத்தி செய்கின்ற யூ.என்.டி.பி. நிறுவனம் அனர்த்த முகாமைத்துவ திட்டத்தின் கீழ் முதல்முறையாக இக்கிராமத்தில் பயன்தரும் மரங்களை வளர்க்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது.
மக்கள் அனைவரும் இத்திட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டு இதனூடாக பயன்பெற வேண்டும்.
இத்துடன் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார, பொருளாதார மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை அதிகளவு செய்து தரவேண்டும் என்றார்.
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரி பூஜார்டீன் உரையாற்றுகையில்;
இன்று உங்களுக்கு ஏற்பட்டுள்ள அனர்த்தம் இந்த உலகத்தில் யாருக்கும் நடக்கவில்லை. ஏனென்றால் ஒரு நகர மயமாக்கப்பட்ட மீனவர்களாக இருந்த சமுதாயத்தை இரவோடு இரவாக கிராமிய விவசாய சமுதாயமாக மாற்றியமைக்கும் நிலைமையேற்பட்டுள்ளது.
விவசாய சமுதாயமாக மாற்றப்பட்டுள்ள உங்களுடைய வாழ்வாதார, பொருளாதார வீழ்ச்சியில் இருந்து உயர்வதற்கு ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்ட அனர்த்த முகாமைத்துவத்தினூடாக சேவை ஆற்ற தயாராக இருக்கிறோம்.
எனவே எமது ஆரம்ப இத் திட்டத்தை நல்ல முறையில் வெற்றிபெற செயல்படுத்த நீங்கள் பூரண ஒத்துழைப்பு வழங்கினால் அனர்த்த முகாமைத்துவத்திற்காக இன்று அதிக நிறுவனங்கள் பணத்துடன் இருக்கின்றார்கள். அவர்கள் மூலம் பலதிட்டங்களை செயல்படுத்த ஏற்பாடுகளை செய்து தரமுடியும் என்றார்.
இந்நிகழ்வில் யு.என்.டி.பி. அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ஏ.எஸ்.சியாற் திட்ட அதிகாரி தணிகசீலன் ஆகியோரும் கலந்து கொண்டு உரையாற்றினர்.