மனித உரிமை பாதுகாவலர்களுக்கான ஆறு மாத காலப்பயிற்சி நெறி ஒன்றை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்கான தேசியப் பாதுகாப்பிற்கும் நிரந்தர தீர்வுக்குமான செயற்றிட்டம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் ஆரம்பிக்கவிருக்கிறது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஏழு பிராந்தியங்களில் வாழும் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர்களில் இருந்து தெரிவு செய்யப்படுபவர்களுக்கே இப்பயிற்சி நெறி வழங்கப்படவுள்ளது.
இதன்படி திருகோணமலைப் பிராந்தியத்தில் வசிக்கும் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோரிலிருந்து முதல் தொகுதியாக அறுபது பேர் இப்பயிற்சி நெறிக்குத் தெரிவு செய்யப்படவுள்ளனர். இதற்கான விண்ணப்பங்களை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உள்ளக இடம்பெயர்ந்தோருக்கான நிரந்தர தீர்விற்கும் தேசிய பாதுகாப்பிற்குமான செயற்றிட்டத்தின் திருகோணமலை அலுவலகம் திருகோணமலைப் பட்டினமும் சூழலும், கிண்ணியா, குச்சவெளி, மூதூர், ஈச்சிலம்பற்று, சேருவில ஆகிய பிரதேச செயலகங்கள் ஊடாகக் கோரியுள்ளது. இதற்கான விண்ணப்பப்படிவங்கள் இப்பிரதேச செயலகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. விண்ணப்பங்களை அனுப்பும் கடைசித் திகதி இம்மாதம் 25 ஆம் திகதியாகும்.
திருகோணமலை மாவட்டத்தில் மூதூர், ஈச்சிலம்பற்று, சேருவில, குச்சவெளி, கிண்ணியா, திருகோணமலை பட்டினமும் சூழலும் ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளில் 17,965 உள்ளக இடம்பெயர்ந்தோர் வாழ்கின்றனர். இவர்களில் 6,579 பேர் பதினெட்டு (18) நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எஞ்சிய 11,386 பேரில் ஒரு தொகுதியினர் உறவினர்களுடன் தங்கியுள்ளனர். இன்னும் ஒரு தொகுதியினர் மீளக்குடியமர்த்தப்பட்டனர். ஏனையோர் மீள் குடியேற்றப்படவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
தனது சமூகத்திற்காக தனிப்பட்ட முறையிலும் சமூகத்தின் சார்பிலும் செயற்படக்கூடியவர்களுக்கு இம்மனித உரிமைகள் பாதுகாவலர்களுக்கான பயிற்சிநெறி வழங்கப்படவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தெரிவு செய்யப்படும் உள்ளக இடம்பெயர்ந்தோருக்கு மனித உரிமைகள் பேணலின் ஆரம்பகாலம், அடிப்படை நியமங்கள், இலங்கையில் அடிப்படை உரிமைகள் மற்றும் மனித உரிமைகளின் நிலைப்பாடு, மனித உரிமைகள் யாவை மற்றும் உள்ளக இடம்பெயர்ந்தோருக்குள்ள உரிமைகள், அவற்றைப் பெறும் வழிவகைகள் பற்றி இப்பயிற்சிநெறியின் போது விளக்கமளிக்கப்படும். இலவசமாக நடத்தப்படும். இப்பயிற்சிநெறிக்கு விண்ணப்பிப்போர் 20 40 வயதுக்கு உட்பட்டவராக இருக்கவேண்டும், ஆகக் குறைந்தது க.பொ.த. (சாதாரணதரம்) வரை கற்றிருக்க வேண்டும். சிறந்தமொழி ஆற்றலைக் கொண்டிருக்க வேண்டும், சமூகசேவை மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் ஆர்வமுடையவராக இருத்தல் வேண்டும். மற்றும் சகல இனங்களைச் சேர்ந்த மக்களுடனும் இணைந்து வேலை செய்யக்கூடியவராக இருக்க வேண்டும். ஆகிய தகைமைகளைக் கொண்டிருக்கவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பப்படிவங்களை இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் திருகோணமலை அலுவலகத்திலும் பெறமுடியும்.