* ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவிப்பு
உள்நாட்டு யுத்தம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவது காரணமாக மிக மோசமான நஷ்டத்தைத் தாம் எதிர்கொண்டுள்ளதாக ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக சிரேஷ்ட அரசாங்க அதிகாரியொருவர் தெரிவிக்கையில் கூறியதாவது;
விடுதலைப் புலிகள் நாட்டின் பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் சுற்றுலாத்துறையையும் இலக்கு வைத்துள்ளனர்.
இதேவேளை, உல்லாசப் பயணிகள் எதிர்கொண்டுள்ள அச்சம் காரணமாக கடந்த மே மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 9.3 வீதத்தால் வீழ்ச்சி கண்டிருந்தது. எனினும் சுற்றுலா மேம்பாட்டுக்கான அமைப்பினால் இந்த பாதிப்பைத் தடுத்து நிறுத்த தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதோடு இதனை தடுத்து நிறுத்த சுற்றுலாத்துறைக்கு உதவ முடியும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.
இந்தநிலைமை தொடர்பாக கருத்துத் தெரிவித்த சுற்றுலாத்துறை செயலாளர் ஜோர்ஜ் மைக்கேல் இலங்கைக்கு எதிராக ஜப்பான் தெரிவித்துவரும் சுற்றுலா பயண அச்சுறுத்தலைத் தடுத்து நிறுத்த அரசாங்கம் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் இப்பிரச்சினை பற்றி கலந்துரையாடுவதற்கு பிரதி வெளியுறவு அமைச்சர் டோக்கியோ சென்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
கடந்தவாரம் இலங்கை ஹோட்டல் கூட்டுத்தாபனத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட ஸ்ரீலால் மித்த பால இது தொடர்பாக தெரிவிக்கையில்;
தற்போது சுற்றுலாத்துறை எதிர்கொண்டுள்ள மோசமான பாதிப்பு சாத்தியமான ஒன்றே எனவும் இவ்வாறான நிலைமைகளை சுற்றுலாத்துறை ஏற்கனவே முகம்கொடுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
ஆயினும், அச்சத்துடன் கூடிய இந்த நிலைமைகளை மேம்படுத்த தாம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்த மித்தபால பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதற்கு அரசாங்கத்துக்கு உதவுவதன்மூலம் நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு அக்கறையுடன் செயற்பட சுற்றுலாத்துறை தயாராகவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேநேரம், கடந்த 30 வருடங்களாக பிரிவினை கோரி விடுதலைப் புலிகள் மேற்கொண்டுவரும் யுத்தத்தின் போது மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகள் முறிவடைந்ததைத் தொடர்ந்து சம்பிரதாய பூர்வமாக இருந்த யுத்த நிறுத்தமும் இந்த வருடத்துடன் முடிவுக்கு வந்துள்ளது.
சுற்றுலாப் பயணிகளின் வருகை வருடாந்தம் 6 வீத அதிகரிப்பை பேணிவந்த போதும் 19832004 காலப்பகுதிகளில் சுற்றுலாத்துறை 6.3 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை இழந்துள்ளதாக மார்கா நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மதிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் வெளியுறவுச் செயலாளர் பாலித கோஹண சுற்றுலாத்துறையின் நிலை பற்றி தெரிவிக்கையில்;
கடந்த காலங்களில் பொருளாதார இலக்குகளை விடுதலைப் புலிகள் தாக்கியதன் மூலம் இராணுவ நடவடிக்கைகளில் வெற்றி பெற்றனர் எனத் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஒவ்வொரு யுத்தங்களின் போதும் பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட பாதிப்புகளின் அடிப்படையிலேயே வெற்றி, தோல்விகள் மதிப்பிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.