* செல்வம் எம்.பி.கூறுகிறார்
பி.ரவிவர்மன்
விடுதலைப் புலிகள் நல்லெண்ண நோக்கத்துடன் வெளியிட்டுள்ள யுத்தநிறுத்த அறிவிப்பை அரசாங்கம் தட்டிக்கழித்து உதாசீனப்படுத்தியுள்ள நடவடிக்கையானது இன நெருக்கடித் தீர்வு முயற்சிகளுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் ஒருபோதும் நீதியானதும் நேர்மையானதுமான தீர்வொன்றை வழங்கப் போவதில்லை என்பதையே தெளிவாகச் சுட்டிக்காட்டி நிற்கின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில் கூறியதாவது;
சர்வதேச சமூகத்துடனும் பிராந்தியத்திலுள்ள அயல்நாடுகளுடனும் நட்புறவை வளர்க்கும் நல்லெண்ணத்துடனும் கொழும்பில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டை முன்னிட்டும் எதிர்வரும் 26 ஆம் திகதி சனிக்கிழமை முதல் ஆகஸ்ட் 4 ஆம் திகதி திங்கட்கிழமை வரையும் ஒரு தலைப்பட்சமான போர்நிறுத்தத்தைக் கடைப்பிடிக்கவுள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.
யுத்தம் உக்கிரமடைந்துள்ள இன்றைய மிக மோசமான நெருக்கடியான சூழ்நிலையிலும் சமாதான முயற்சிகளை மீண்டும் ஆரம்பிக்க முடியாத நெருக்கடியான சூழ்நிலை தோன்றியுள்ள இன்றைய சூழ்நிலையிலும் விடுதலைப் புலிகளால் அறிவிக்கப்பட்டுள்ள ஒரு தலைப்பட்சமான போர்நிறுத்த அறிவிப்பை அரசாங்கம் நல்லெண்ண நோக்கத்துடன் அணுக வேண்டுமே தவிர அதனை தட்டிக்கழிக்கும் நடவடிக்கையானது இனநெருக்கடித் தீர்வு முயற்சிகளை அதலபாதாளத்திற்கே தள்ளிவீழ்த்திவிடும் என்பதை தென்னிலங்கையின் அனைத்து அரசியல் சக்திகளும் உணர்ந்து செயற்பட வேண்டும்.
அதேநேரம் விடுதலைப் புலிகள் தாமாகவே முன்வந்து அறிவித்துள்ள ஒரு தலைப்பட்சமான யுத்தநிறுத்த அறிவிப்பை சர்வதேச சமூகத்தின் நல்லெண்ணத்தையும் நன்மைகளையும் பெற்றுவிடலாமென்று அரசு அச்சப்படுவதுடன் தற்போது முழுமையான போர் நடவடிக்கைகளுக்குள் முடுக்கி விடப்பட்டுள்ள முப்படையினரின் மனோநிலையில் மாற்றங்கள் உருவாகலாம் என்ற இராணுவ நிபந்தனையிலிருந்து விடுபட முடியாத நிலைமைக்குள் தள்ளப்பட்டுள்ளதையும் அரசின் நடவடிக்கைகள் தெட்டத் தெளிவாக சுட்டிக்காட்டி நிற்கின்றது.
தொடரும் போர் நடவடிக்கைகளால் தமிழ் மக்கள் தினமும் அனுபவித்துவரும் மனித அவலங்களை, பட்டினிச் சாவை, துயர வாழ்வை ஒரு கேளிக்கை நடவடிக்கையாகவே இன்றைய அரசாங்கம் கருதுகின்றது என்பதையே தொடரும் ஒவ்வொரு சம்பவங்களும் துல்லியமாக வெளிக்காட்டி நிற்கின்றது.