இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவினர் நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்திற்கு வருகை தந்ததுடன் பார்வையாளர் கலரியில் அமர்ந்திருந்து சபை அமர்வுகளையும் சிறிது நேரம் அவதானித்தனர்.
அச்சமயம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. சிவாஜிலிங்கத்துக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்குமிடையில் கடும் வாய்த்தர்க்கம் இடம்பெற்றுக் கொண்டிருந்தது.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை சார்க் மாநாட்டுக்கான நிதி செலவீடு தொடர்பிலான பிரேரணை இடம்பெற்றது இதன் போது சிவாஜிலிங்கம் மிகவும் கார சாரமாக இலங்கை அரசின் செயற்பாடுகளைக் கண்டித்து உரையாற்றிக் கொண்டிருந்தார்.
அப்போது பாராளுமன்ற கலரியில் அமர்ந்திருந்த ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவினர் மிகவும் உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருந்தனர். அச்சமயம் சபையில் அமைச்சர்கள் பெருமளவானோர் இருக்கவில்லை. இந்நிலையில் திடீரென வந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சிவாஜிலிங்கத்துடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டார்.
சிவாஜிலிங்கத்தை பேச விடாது தொடர்ந்தும் அமைச்சர் டக்ளஸ் குறுக்கீடு செய்து கொண்டே இருந்தார். நீங்கள் புலிகள் உங்கள் தலைவர் பிரபாகரன் நீங்கள் இடம்மாறி வந்து உரையாற்றுகிறீர்கள், உங்களை புலிகள் தானே இங்கே அனுப்பி வைத்தார்களென குறிக்கீடு செய்து கொண்டே இருந்தார்.
இருவருக்குமிடையிலான இந்த தர்க்கத்தையும் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் கேட்டுக் கொண்டிருந்தனர். அமைச்சர்கள் புன்முறுவலுடன் அமர்ந்திருந்தனர்.
இதேவேளை, ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் பலர் சபையை பல கோணங்களிலும் புகைப்படமெடுத்துக் கொண்டிருந்தனர்.
சிவாஜிலிங்கத்தின் பின்னர் உரையாற்றிய அமைச்சரும் சபை முதல்வருமான நிமல் சிறிபால டி சில்வா ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழுவை சபைக்கு அறிமுகம் செய்து வைத்தார். எம்.பி.க்கள் அமைச்சர்கள் மேசையில் தட்டி வரவேற்றனர். அவர்களும் எழுந்த நின்று மரியாதை செலுத்தினர்.
இதேவேளை, ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழு கலரியில் இருக்கும் வரை சபாநாயகர் ஆசனத்தில் மதகுருவான உடவத்த நந்ததேரரே அமர்ந்திருந்தார்.