* குற்றம் சாட்டுகிறது ஐ.தே.க.
எம்.ஏ.எம்.நிலாம்
வடமத்திய, சப்ரகமுவ மாகாணங்களில் தேர்தல் வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தெரிவித்திருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி மோசடிகள் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்ற ஆளும்தரப்பு முனைவதாகவும் குற்றம் சாட்டியது.
அரச தரப்பின் வன்முறைக் கலாசாரத்துக்கு எதிராக அனைத்து எதிரணியினரும் ஒன்றுபட வேண்டுமெனவும் ஐக்கிய தேசியக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க் கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஐ.தே.க. செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;
வடமத்திய மாகாணத்தில் அநுராதபுரம், பொலநறுவை மாவட்டங்களிலும் சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களிலும் இதுவரையில் 22 தாக்குதல்களும் 20க்கும் மேற்பட்ட வன்முறைகளும் இடம்பெற்றுள்ளன. நாளாந்தம் எதிரணியினர் மீதான அடாவடித்தனங்கள் இடம்பெற்ற வண்ணமே உள்ளது.
பொலநறுவையில் ஆளும் தரப்பை ஆதரிக்காதவர்களின் நெல் ஆலைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. நெல் ஆலைகள் தீக்கிரையாக்கப்படுமென அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டுள்ளன.
இன்னொருபுறம் சுயாதீன பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியை பெறாமல் பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுகின்றார்கள். சட்டம், ஒழுங்கைப் பாதுகாக்க முற்படும் பொலிஸ் அதிகாரிகளே இடமாற்றம் செய்யப்படுகின்றனர். அரச தரப்புக்கு காவடி தூக்கும் அதிகாரிகளுக்கு பதவி உயர்வுகள் கூட வழங்கப்படுகின்றன.
இலக்கத் தகடில்லாத வாகன நடமாட்டம்
வடமத்திய மாகாணத்தில் அநுராதபுரத்தில் இலக்கத் தகடில்லாத பல வாகனங்கள் நடமாடிக் கொண்டிருக்கின்றன. இது குறித்து பொலிஸாருக்கு முறையிட்ட போதிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரியவில்லை.
முன்னாள் முதலமைச்சர் பேர்டி பிரேமலால் திசாநாயக்கா பாவித்த ஙிகஇ2008/2007 இலக்கங்களைக் கொண்ட பல இலக்கத்தகடுகள் பாவிக்கப்பட்டு வருவதையும் காணமுடிகிறது. ஒரே இலக்கத் தகட்டில் மூன்று வாகனங்கள் குறித்து பொலிஸாருக்கு பல தடவைகள் அறிவிக்கப்பட்டபோதிலும் அவை சர்வசாதாரணமாக நடமாடிக் கொண்டிருப்பதை காணலாம்.
எதிரணியினரின் முறைப்பாடுகளைக் கூட பொலிஸார் ஏற்பதாக இல்லை. சில சந்தர்ப்பங்களில் முறையிடச் சென்றால் முறைப்பாட்டாளரையே கைது செய்ய பொலிஸார் முனைகின்றனர். அந்தளவுக்கு அரச வன்முறைகள் தலைவிரித்தாடுகின்றது.
நீதிமன்றம் பொலிஸாரை எச்சரித்தபோதிலும் பொலிஸாரின் செயற்பாடுகளில் மாற்றம் காணப்படவில்லை. ஆளுந்தரப்புக்காக மட்டுமே பொலிஸார் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
கிராமப்புறங்களின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட ஊர்காவல் படையினர் முன்னாள் முதலமைச்சரால் அழைக்கப்பட்டு தனிப்பட்ட சலுகைகள் வழங்கி தேர்தல் பிரசாரங்களுக்கு பயன்படுத்தப்படுகின்றனர். அரச வளங்களும் வாகனங்களும் தாராளமாக பயன்படுத்தப்படுகின்றன.
அரசின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக எதிரணிகள் அனைத்தும் ஒன்றுபட்டு குரல் எழுப்பமுன்வர வேண்டும். ஜனநாயகத்தையும் வாக்குரிமையையும் பாதுகாக்க ஒன்றுபடுமாறு அழைக்கின்றோம். நாட்டின் இறைமையையும் மக்களின் அடிப்படை உரிமைகளையும் பாதுகாக்க கட்சி வேறுபாடுகளின்றி ஒன்றுபட வேண்டிய அவசரம் உருவாகியுள்ளது? எனவும் திஸ்ஸ அத்தநாயக்கா சுட்டிக்காட்டினார்.