திருகோணமலை புல்மோட்டை கடற்பரப்பில் நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்ற கடற்சமரில் கடற்புலிகளின் படகொன்று மூழ்கடிக்கப்பட்டதாகவும் இரு படகுகள் சேதமாக்கப்பட்டதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
புல்மோட்டை கடற்பரப்பில் கரையிலிருந்து சுமார் இரு கடல் மைல் தூரத்தில் அதிகாலை 1.30 மணியளவில் இந்தக் கடற்சமர் நடைபெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முல்லைத்தீவு/ நாயாறு பகுதியிலிருந்து புல்மோட்டை நோக்கி வந்த கடற்புலிகளின் ஐந்து படகுகளை வழி மறித்த கடற்படையினரின் அதிவேக டோரா பீரங்கிப் படகுகளே இந்தத் தாக்குதலை நடத்தியதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
சில மணிநேரம் நடைபெற்ற இந்தக் கடற்சமரில் கடற்புலிகளின் ஒரு படகு தாக்கியழிக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டதாகவும் இரு படகுகள் பலத்த சேதத்துடன் பின்வாங்கிச் சென்றதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.
இந்த மோதலில் சுமார் பத்து புலிகள் கொல்லப்பட்டிருக்கலாமெனவும் தெரிவித்த படையினர் இந்தச் சமரில் கடற்படைப் படகுகளுக்கோ அல்லது கடற்படையினருக்கோ எதுவித பாதிப்பும் ஏற்படவில்லையென்றும் தெரிவித்தனர்.