* மக்கள் உணவுக்கு அவதிப்படும் நிலையில் இது அவசியமா? ஜோன் அமரதுங்க கேள்வி
கொழும்பில் இடம்பெறவுள்ள சார்க் மாநாட்டின் மூலம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு தலைமைப் பதவி கிடைக்க வேண்டுமென்ற ஒரேயொரு நோக்கத்தை தவிர வேறு எந்தவிதமான நோக்கங்களும் இந்த அரசாங்கத்துக்கு கிடையாதென ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற சார்க் மாநாடு தொடர்பிலான செலவினங்களுக்கான குறைநிரப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது:
வெளிநாட்டு அமைச்சுக்காக 2008 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 6.5 பில்லியன் நிதியொதுக்கப்பட்டது. ஆனால் ஒரு வருடத்துக்கு ஒதுக்கப்பட்ட இந்த நிதியை 6 மாதங்களில் செலவழித்து விட்டு இன்று குறை நிரப்பு பிரேரணை கொண்டு வருகிறார்கள். இதில் எமக்கு சந்தேகமுள்ளது.
சார்க் மாநாடு இந்த ஆண்டு மாலைதீவிலேயே நடைபெறவிருந்தது. ஆனால், இந்த அரசு மகிந்தவை தலைவராக்க வேண்டுமென்பதற்காக சார்க் மாநாட்டை வாரியணைத்து கொழும்புக்கு கொண்டு வந்து விட்டது.
இன்று நாடுள்ள நிலையும் மக்கள் உணவுக்கே வழியின்றி அவதிப்படும் வேளையிலும் இந்த சார்க் மாநாடு இலங்கைக்கு அவசியமா? இதற்கு பல கோடி ரூபா செலவிடப்பட வேண்டுமா? இந்த சார்க் மாநாட்டின் மூலம் வறுமைப்பட்ட மக்கள் வீதிகளுக்கு விரட்டப்பட்டுள்ளார்கள்.
இந்த சார்க் மாநாட்டில் பங்கேற்க பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் தலைவர்கள் வரமாட்டார்கள். இந்திய தலைவர்கள் வருவதும் உறுதியல்ல. அவ்வாறானால் இந்த சார்க் மாநாட்டினால் இந்த அரசுக்கு என்ன இலாபம்.
இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் இலங்கை, இந்திய நாடுகளுக்கிடையிலான நட்புறவுக்கு ஆபத்து வந்துள்ளது. இலங்கைத் தூதுவரை அழைத்து இந்திய அரசு எச்சரித்துள்ளது. இந்தப் பிரச்சினையில் கூட சிலவேளை இந்தியப் பிரதமர் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள வருகை தராமல் இருக்கலாம்.
இந்த மாநாட்டின் மூலம் மஹிந்த ராஜபக்ஷ தலைவராவதைத் தவிர வேறு எந்தவித நன்மையும் இந்த நாட்டுக்கு கிடைத்து விடப்போவதில்லை.