எம்.ஏ.எம்.நிலாம்
விடுதலைப்புலிகளின் ஒருதலைப் பட்சமானபோர் நிறுத்த அறிவிப்பானது எந்த நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டது என்பது குறித்து எதுவும் தெரியாதெனக் கூறியிருக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி, போர்நிறுத்தமொன்று வருமானால் அதனை வரவேற்பதாகவும் தெரிவித்தது.
சர்வதேசத்தினதும், சார்க் தலைவர்களதும் நல்லெண்ணத்தைப் பெற்றுக் கொள்ளும் ஒரு முயற்சியாகக் கூட இதனைக் கருதலாமெனவும் எவ்வாறாக இருப்பினும் தற்காலிக போர்நிறுத்த அறிவிப்பு குறித்து முடிவெடுக்க வேண்டியது அரசாங்கமே ஆகுமெனவும் ஐக்கிய தேசியக்கட்சி சுட்டிக்காட்டியது.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் ஐக்கிய தேசியக்கட்சி, பொதுச் செயலாளரும், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்கா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;
விடுதலைப்புலிகள் தற்காலிகமாக ஒருதலைப்பட்ச போர்நிறுத்தத்தை அறிவித்துள்ளதாக அறியவருகின்றோம். இதன் நோக்கம் என்னவென்பது குறித்து எம்மால் எதுவும் கூறமுடியாது. பெரும்பாலும் சார்க் தலைவர்களதும், சர்வதேசத்தினதும் நல்லபெயரைப் பெற்றுக்கொள்ளும் முயற்சியாகக் கூட கருதமுடியும். ஆனால், ஐக்கிய தேசியக்கட்சி யுத்தம் தொடர்வதை வரவேற்கவில்லை. உயிரழிவுகள் அனுமதிக்கப்பட முடியாது. பாதுகாப்பு அச்சுறுத்தலால் நாடு பாரிய அவலத்துக்குள் தள்ளப்பட்டிருக்கின்றது. நாட்டினதும், மக்களினதும் பாதுகாப்பை உறுதி செய்வதைவிட அரசாங்கம் யுத்தத்திலேயே முனைப்புக் காட்டிவருகின்றது. இதனை நாம் வரவேற்க முடியாது. அந்த வகையில் புலிகளின் ஒருதலைப்பட்ச போர்நிறுத்தத்தை நாம் வரவேற்கின்றோம்.
இந்தப் போர்நிறுத்தத்தை ஏற்பதா இல்லையா என்பதை அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும். ஏனெனில், யுத்தம் புரிவது அரசாங்கமும், விடுதலைப்புலிகளும் தான். அவர்கள் தான் முடிவெடுக்க முடியும்.
எதிர்க்கட்சியிலிருக்கும் நாம் இது குறித்து எத்தகைய முடிவையும் தெரிவிக்க முடியாது.
நாட்டு மக்கள் யுத்தத்தை விரும்பவில்லை. ஆனால், அரசாங்கம் மக்களை தவறான பாதையில் கொண்டு சென்று மக்களை பாதுகாப்பதிலிருந்து விலகிச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.
நாட்டின் இறைமை, பாதுகாப்பு பற்றிப் பேசுபவர்கள் இணைந்து இயங்கும் அரசாங்கத்தினால் இந்தியா உட்பட சார்க் தலைவர்களுக்கு சரியான பாதுகாப்பு வழங்குவதில் தயக்கத்துடன் காணப்படுவதாகவே தெரிகிறது. இதன் காரணமாகவே இந்தியத் தலைவர் உள்ளிட்ட சார்க் தலைவர்கள் சிலர் சுய பாதுகாப்பு அதிகாரிகளுடன் வரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது எனவும் திஸ்ஸ அத்தநாயக்கா தெரிவித்தார்.