இந்தியப் பாராளுமன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை பரபரப்புகளுக்கு மத்தியில் இடம்பெற்ற நம்பிக்கைத் தீர்மான இறுதிக்கட்ட வாக்கெடுப்பில் ஆளும் ஐக்கிய முற்போக்கு முன்னணி அரசு வெற்றிபெற்றுள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு ஆதரவாக 275 வாக்குகளும் எதிராக 256 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்த நிலையில் 19 வாக்குகளால் ஆளுங்கட்சி வெற்றிபெற்றுள்ளது.
இதேவேளை, இருவர் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லையென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நம்பிக்கை வாக்களிப்பு விவாதத்துக்கு பதில் அளித்து பிரதமர் மன்மோகன் சிங் பேச எழுந்ததும் சபையில் எதிர்க்கட்சியினர் எழுந்து நின்று கூச்சலிட்டனர்.
இதனால் பிரதமரின் பேச்சை எவரும் கேட்கமுடியாத நிலை உருவானதால் பிரதமர் தனது பதிலை சபாநாயகரிடம் தாக்கல் செய்ததைத் தொடர்ந்து வாக்களிப்பை நடத்த சபாநாயகர் உத்தரவிட்டார்.
முதலில் குரல் மூல வாக்களிப்பு நடைபெற்று அதனைத் தொடர்ந்து இலத்திரனியல் முறையில் நடத்தப்பட்ட வாக்களிப்பில் அரசுக்கு ஆதரவாக 275 வாக்குகளும் எதிராக 256 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து வாக்குச்சீட்டு மூலமான வாக்களிப்பு நடத்தப்பட்டது.
இதேவேளை, வாக்களிப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது பாரதீய ஜனதா கட்சி எம்.பி.க்கள் பணக்கட்டுக்களை சபாநாயகர் முன் கொட்டியதால் சபையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
எதிர்க்கட்சியினரைத் தமக்கு ஆதரவு வழங்குமாறு கோரி சமஜ்வாடி கட்சியினர் பணம் வழங்கியதாக பாரதீய ஜனதாக் கட்சியினர் பணக் கட்டுக்களை சபாநாயகர் முன் கொட்டியதால் ஏற்பட்ட பரபரப்பை தொடர்ந்து சபை சிறிது நேரம் ஒத்தி வைக்கப்பட்டது.
இவ்விடயம் குறித்து பரிசீலனை செய்வதாக சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி தெரிவித்தார்.