சார்க் மாநாட்டுக்காக ஸ்ரீ லங்கா வரவிருக்கும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தற்போதுள்ள நிலையில் புலிகள் இயக்கத்தின் கொலை அச்சுறுத்தலுக்குள்ளாகி இருப்பதாகவும் இந்த வகையில் புலிகள் இயக்கத்தினர் ஸ்ரீ லங்காவில் வைத்து இந்திய பிரதமர் மீது தற்கொலை தாக்குதலையோ அல்லது வேறு வகையிலான கொலை தாக்குதலையோ மேற்கொள்ளக் கூடும் எனவும் பிரபல அவுஸ்திரேலிய பத்திரிகையான "த அவுஸ்ரேலியன்' ( THE AUSTRLIAN) செய்தி வெளியிட்டுள்ளது. இவ்வாறு கடந்த 18 ஆம் திகதி வெளியான மேற்படி அவுஸ்திரேலியப் பத்திரிகையில் பிரசுரமாயிருக்கும் தகவலை மேற்கோள் காட்டி இந்தியத் தரப்பில் சிரேஷ்ட இந்திய பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் இந்திய பாதுகாப்பு துறையின் தலைமைப்பீடத்துக்கு முன்னெச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி மீது புலிகள் இயக்கத்தினர் மேற்கொண்ட தற்கொலைத் தாக்குதல் உட்பட புலிகள் இயக்கத்தினரால் கடந்த காலங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் பற்றி இந்தியப் பாதுகாப்பு துறை நன்கு அறியும் எனவும் எனவே தற்போது ஸ்ரீ லங்காவின் தலைநகர் கொழும்பில் சார்க் மாநாடு நடக்கப் போகும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அதில் பங்குபற்ற வரும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மீது புலிகள் இயக்கத்தினர் கொலை தாக்குதலை மேற்கொள்ளப்போவதாக அவுஸ்திரேலிய பத்திரிகை தெரிவித்துள்ளதையிட்டு இந்தியப் பாதுகாப்புத்துறை விசேட எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டியுள்ளதாக மேற்படி இந்திய சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் புலிகளிடமிருந்து இந்திய பிரதமருக்கு கொலை அச்சுறுத்தல் ஏற்படலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்திய பாதுகாப்புத் துறை ஏற்கனவே பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் இதற்கேற்ப இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தலைநகர் கொழும்பில் வந்திறங்குவதற்கு முன்னரும் பின்னரும் இந்திய விமானப்படையின் தாக்குதல் ஹெலிகொப்டர்கள் அவர் நடமாடவிருக்கும் கொழும்பு தரைபகுதிகள் மீது தீவிரமாக நோட்டமிடும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபடவுள்ளதாகவும் குறிப்பிட்டிருக்கும் மேற்படி "த அவுஸ்திரேலியன்' பத்திரிகை இவை அனைத்தும் தலைநகர் கொழும்பில் சார்க் மாநாடு நடக்கும் சந்தர்ப்பத்தில் இந்திய பிரதமர் மீது புலிகள் இயக்கத்தினர் கொலைத்தாக்குதலை மேற்கொள்ளலாம் என்ற தகவல்களையும் அவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளக்கூடிய சாத்தியப்பாட்டை உறுதிசெய்வதாக அமைந்துள்ளதாக அந்த பத்திரிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதேவேளை சார்க் மாநாட்டில் பங்குபற்ற வேண்டாமென இந்தியாவில் தமிழ் நாட்டில் இயங்கும் புலிகள் இயக்கத்துக்கு சார்பான பல அரசியல் கட்சிகள் இந்திய பிரதமரைக் கேட்டுள்ளபோது அவர்களின் கோரிக்கையை அவர் மறுத்துவிட்டதாகவும் மேலும் குறித்த அவுஸ்திரேலியப் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. திவயின :19.7.2008