பாதுகாப்பு பிரச்சினை காரணமாக சாம்பியன்ஸ் கிண்ணத் தொடரை நடத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கலைத் தீர்க்க அந்நாட்டு கிரிக்கெட் சபை இந்திய கிரிக்கெட் சபையின் (பி.சி.சி.ஐ.) ஆதரவை நாடுவதாக தெரிகிறது.
சாம்பியன்ஸ் கிண்ணத் (மினி உலகக் கிண்ணம்) தொடர் வரும் செப்டெம்பர் மாதம் பாகிஸ்தானில் நடக்கிறது. சமீபகாலமாக இங்கு பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்திருப்பதை அடுத்து அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து வீரர்கள் போட்டிகளில் பங்கேற்க தயங்கி வருகின்றனர். அவுஸ்திரேலிய கப்டன் பொண்டிங் இதை வெளிப்படையாக தெரிவித்தார்.
பாதுகாப்பு சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஐ.சி.சி., தொடரை வேறிடத்துக்கு மாற்ற ஆலோசித்து வருகிறது. இதையடுத்து, போட்டியை நடத்த தாங்கள் தயாராக இருப்பதாக தென்ஆபிரிக்கா மற்றும் இலங்கை சபைகள் தெரிவித்துள்ளன. இது தொடர்பான ஐ.சி.சி., கூட்டம் இந்த வார இறுதிக்குள் நடக்கும் என தெரிகிறது.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் சபை (பி.சி.சி.ஐ.) சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. பி.சி.சி.ஐ., ஆதரவு கொடுத்தால் ஐ.சி.சி. போட்டியை வேறிடத்துக்கு மாற்றாது என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் அளித்த பேட்டியில்; அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் தென்ஆபிரிக்க அணிகள் பாகிஸ்தானில் பங்கேற்க அச்சம் தெரிவித்துள்ளன. பி.சி.சி.ஐ., வலிமை வாய்ந்தது மட்டுமல்ல செல்வாக்கு பெற்றதும் கூட. பி.சி.சி.ஐ., எங்களுக்கு ஆதரவளித்தால் மற்ற நாடுகளும் பாகிஸ்தானில் விளையாட சம்மதிக்கும். ஐ.சி.சி., கூட்டத்தில் வாக்கெடுப்பு நடந்தால் இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், சிம்பாப்வே மற்றும் மேற்கிந்தியா என 5 உறுப்பினர்கள் ஆதரவளிப்பார்கள். இவர்கள் பாகிஸ்தானில் விளையாட ஆர்வமாக இருக்கின்றனரெனவும் தெரிவித்தார்.
இதற்கிடையில் சாம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளை ஒத்திவைக்கும் பேச்சுக்கே இடமில்லை என ஐ.சி.சி. உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதுபற்றி அவர் கூறுகையில்,
""குறிப்பிட்ட அட்டவணைப் படி போட்டிகள் நடந்தே தீரும். எங்களது அதிகாரத்தைப் பயன்படுத்தி தேவையான பாதுகாப்பை வழங்க முடியும். ஆனால், உறுதியாக உத்தரவாதம் தர முடியாது. அநேகமாக பாகிஸ்தானில் போட்டிகள் நடத்தப்படலாம். இது சம்பந்தமாக இந்தப் போட்டியில் கலந்துகொள்ளும் நாடுகளிடம் ஒருமித்த கருத்து ஏற்படும் வரை ஐ.சி.சி., தனது முடிவை நிறுத்திவைக்க முடிவு செய்துள்ளது' என்றார்.