இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் ஆரம்பமாகிறது.
முதல் டெஸ்டில் பங்கேற்கும் இலங்கை அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. "மாயாஜால' பந்துவீச்சாளர் மென்டிஸ் வாய்ப்புப் பெற்றுள்ளார். மலிங்க, மக்ரூப் காயமடைந்த நிலையில் வேகப்பந்து வீச்சு சற்று பின்னடைந்து காணப்படுகிறது.
இலங்கை வந்துள்ள இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்கிறது. முன்னதாக இந்திய இலங்கை கிரிக்கெட் சபை அணிகள் மோதிய பயிற்சிப் போட்டி "டிரா'வில் முடிந்தது. முதல் டெஸ்ட் இன்று கொழும்பில் தொடங்குகிறது. இதற்கான 14 பேர் கொண்ட இலங்கை அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
இலங்கை முதல் டெஸ்டில் 6 துடுப்பாட்ட வீரர்கள், 4 பந்து வீச்சாளர்கள், ஒரு விக்கெட் கீப்பர் என்ற கூட்டணியில் களமிறங்க விருக்கிறது. ஆட்டத்தை தொடக்கும் பொறுப்பை வர்ணபுர, வான் டோர்ட் ஜோடி பெற்றுள்ளது.
மஹேல ஜெயவர்த்தன மீண்டும் கப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். விக்கெட் கீப்பராக பிரசன்ன ஜெயவர்த்தன அறிவிக்கப்பட்ட நிலையில், சங்கக்கார துடுப்பாட்ட வீரராக களமிறங்குகிறார். பயிற்சிப் போட்டியில் சிறப்பாக விளையாடிய சாமரசில்வா, கப்புகெதர வாய்ப்புப் பெற்றுள்ளனர்.
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சு தான் சற்றுப் பின்னடைந்த நிலையிலிருக்கிறது. மலிங்க, மக்ரூப் ஆகியோரின் காயம் இன்னும் முழுமையாக குணமடையவில்லை. இந்நிலையில், பயிற்சிப் போட்டியில் பங்கேற்ற பெர்னாண்டோவும் முதல் டெஸ்டுக்கான உடற்தகுதியில் தேறாதது இலங்கைக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. சமிந்த வாஸ் நல்ல போர்மில் இருப்பது ஆறுதலான விடயம். இரண்டாவது வேகப்பந்து வீச்சாளராக திலான் துஷார அல்லது நுவான் குலசேகர களமிறங்கலாம்.
டெஸ்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய முரளிதரன் அணியில் இடம்பெற்றுள்ளார். சமீபத்தில் நடந்த ஆசியக் கிண்ண இறுதியாட்டத்தில் இந்திய வீரர்களைத் திணறச் செய்த அஜந்த மென்டிஸ், முரளிதரனுடன் இணைந்து பந்து வீசும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். முதல் டெஸ்டுக்கான அணி குறித்து இலங்கைத் தேர்வுக் குழுத் தலைவர் அஷந்த டி மெல் அளித்த பேட்டியில்;
"" சமீபத்தில் முடிந்த மேற்கிந்தியத் தொடரில் வர்ணபுர, வான்டோர்ட் ஜோடி இலங்கை அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்து. இந்தியாவுடனான தொடரிலும் இவர்களே ஆட்டத்தை தொடக்குவார்கள். மென்டிஸ் சிறந்த பந்துவீச்சாளராக வருவார். டெஸ்டில் இந்திய வீரர்கள் இவரை சமாளிப்பது கடினம்' என்றார்.
14 பேர் கொண்ட இலங்கை அணி:
வான் டோர்ட், வர்ணபுர, சங்கக்கார, ஜெயவர்தன, திலான் சமரவீர, சாமர சில்வா, திலகரத்ன டில்ஷான், பிரசன்ன ஜெயவர்தன, சமிந்த வாஸ், முத்தையா முரளிதரன், அஜந்த மென்டிஸ், திலான் துஷார, நுவான் குலசேகர, சாமர கப்புகெதர.