கொழும்பு முகத்துவாரம் சங்கமத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு எதிர்வரும் 2 ஆம் திகதி சனிக்கிழமை இந்துக்கள் தமது பிதிர்க்கடன்களை மேற்கொள்வதற்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
பாதுகாப்புக் காரணங்களுக்காக முகத்துவாரம் சங்கமம் மற்றும் அதனை அண்மித்த கடற்கரைப் பிரதேசங்களுக்கு பொதுமக்கள் செல்வது 2006 நவம்பர் 25 ஆம் திகதியிலிருந்து படையினரால் தடை செய்யப்பட்டுள்ளது. இது பொதுமக்களின் அடிப்படை உரிமை மீறலெனத் தெரிவித்து இதற்கெதிராக கிராண்ட்பாஸ் ஞான வைரவர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ பால ரவிசங்கர சிவாச்சாரியார் உயர் நீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்திருந்தார்.
அவர் அவ்வழக்கில், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பொலிஸ் மா அதிபர், கடற்படைத் தளபதி, விமானப்படைத் தளபதி மற்றும் சட்டமா அதிபர் ஆகியோரை பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டிருந்தார்.
நேற்று முன்தினம் 29 ஆம் திகதி இவ்வழக்கு உயர்நீதிமன்றில் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா மற்றும் நீதியரசர்கள் நிமால் காமினி அமரதுங்க பி.ஏ. ரட்னாயக்கா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
கொழும்பு மற்றும் மேல் மாகாணத்தில் வாழும் இந்துக்கள் ஆடி அமாவாசை விரதத்தை முன்னிட்டு முகத்துவாரம் சங்கமத்தில் தமது மூதாதையர்களுக்கு பிதிர்க்கடன்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் இதற்கு பாதுகாப்புத் தரப்பினர் அனுமதி மறுத்துள்ளதாகவும் தெரிவித்த மனுதாரர், இந்துக்கள் எந்தவித தடையுமின்றி பிதிர்க்கடன்களை நிறைவேற்ற அனுமதிக்குமாறும் தமது மனுவில் கோரியிருந்தார்.
இதற்கு அனுமதி வழங்க சட்டமா அதிபரின் சார்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி இணக்கம் தெரிவித்தார்.
அதேநேரம், பிதிர்க்கடன்களை நிறைவேற்ற வரும் பொதுமக்கள் தமது அடையாள அட்டை, பொலிஸ் பதிவுச் சான்றிதழ் மற்றும் மாற்று ஆடைகளுடன் மாத்திரம் வருமாறும் வேறு பொருட்களைக் கொண்டு வருவதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், தீர்த்தக்கரைக்குச் செல்பவர்கள் சோதனை செய்யப்பட்டே அனுமதிக்கப்படுவரெனவும் எதிர்வரும் 2 ஆம் திகதி சனிக்கிழமை காலை 5.30 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணிவரை மாத்திரமே இதற்கு அனுமதிக்கப்படுவரெனவும் நீதிபதி தெரிவித்தார்.