* இரத்தினபுரியில் அமைச்சர் சந்திரசேகரன்
மலையக சமூகத்தை மத்தியதர வர்க்கத்துக்கு மாற்றியமைக்க வேண்டுமாயின் அரசியல் ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட சமூகமாக மாறவேண்டும் என்று தெரிவித்துள்ள மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெ.சந்திரசேகரன், எவ்வித மாற்றமும் காணாவிடின் எமது எதிர்கால சந்ததியினரின் நிலை கேள்விக்குறியாகிவிடும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இரத்தினபுரி மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;
ஏனைய சமூகத்தவர்கள் எம்மை ஏளனமாக எடைபோடுவதற்கு நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் பழைமையான லயன் அமைப்பு முறைகளே பிரதான காரணமாக உள்ளது .
1994 ஆம் ஆண்டு எனது ஒரு வாக்கினால் அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா அரசாங்கம் அமைத்தபோது எனக்கு வர்த்தக, வாணிபத் துறை பிரதி அமைச்சு வழங்கப்பட்டது.
ஆனாலும், இந்த அமைச்சின் ஊடாக எமது சமுதாயத்துக்கு பிரயோசனமான எதுவுமே செய்ய முடியாது என்பதனால் இரண்டு மாதங்களில் அந்த அமைச்சை மாற்றி தோட்ட வீடமைப்பு பிரதி அமைச்சராகி சுமார் 50 ஆயிரம் தனித்தனி வீடுகளை அமைப்பதற்கு அத்தியாரம் இட்டேன்.
இன்று இவ்வாறான தனித்தனி வீடுகளில் வாழும் மக்களின் வாழ்க்கை முறை, தேவைகள் எல்லாமே மாறிவிட்டன.
வெள்ளைக்காரர் நிர்வாகத்தின்போது நன்கு பராமரிக்கப்பட்ட பல தோட்டங்களும் பாதைகளும் இன்று காடாகி சீரழிந்து போயுள்ளன.
எமது சமூகத்தை ஒட்டுமொத்தமான ஒரு மாற்றத்துக்கு வழிகாட்டாவிட்டால் எம்மால் எமது எதிர்கால சந்ததியினருக்கு பதில் கூற முடியாது.
எமது அடுத்த சந்ததியையாவது நாம் இந்நாட்டில் தலை நிமிர்ந்து வாழவைக்க வேண்டிய நிலையில் உள்ளோம். இதற்காக எமது இளைஞர்களை நாம் இன்றே தயார் செய்ய வேண்டும்.
எமது இளைஞர்கள் தமக்குரிய அரசியல் உரிமைகளைப் பற்றி சிந்திக்க வேண்டும். நாம் ஒரு சமூகமாக அங்கீகரிக்கப்படுவதற்கு, எமது தனித்துவம் பேணப்படுவதற்கு, அடுத்தவர்களிடம் மண்டியிடாதவர்களாக எமது அடுத்த சந்ததியினர் வாழ்வதற்கு, எமது அவல வாழ்க்கை எம்முடனேயே முடிந்து அடுத்த சந்ததிக்கு அது தொடராமல் இருப்பதற்கு நாம் எமது இளைஞர் சமுதாயத்தை அரசியல் பார்வையுள்ளவர்களாக மாற்ற வேண்டும்.
நான் அரசாங்கத்தில் அமைச்சராக இருக்கின்ற போதிலும் மலையக மக்கள் முன்னணி அரசாங்கத்துடன் இணைந்துள்ளது என்பதற்காக நாம் தனியாக போட்டியிடுவதை தவிர்க்கவில்லை.
அரசாங்கத்தின் அங்கமாக இருந்துகொண்டே இங்கு நாம் தனித்து போட்டியிடுகிறோம் என்றால் அது எமது சமூகத்தின் தனித்துவம் சம்பந்தமானது.
எனவே, இரத்தினபுரி மாவட்டத்தில் வாழும் எமது மக்கள் இந்தத் தேர்தலை ஒரு சமூக சவாலாக ஏற்று மலையக மக்கள் முன்னணிக்கு பெருமளவில் வாக்களிக்க வேண்டும் என்றும் கூறினார்.