* அம்பாறையில் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்
பேனாபிடித்து எழுதுவதைத் தவிர்த்து அதற்குப் பதிலாக ஆயுதங்களைக் கையில் வைத்துக் கொண்டு பிழையான வழியை நமது இளைஞர்களுக்கு காட்டிய தலைமைகளினால் நமது சமூகம் சொல்லொணா துயரங்களை சந்தித்துவிட்டதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
கடந்த திங்கட்கிழமை அம்பாறை டீ.எஸ்.சேனநாயக்க மகாவித்தியாலயத்தில் மாவட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனங்கள் வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்:
இந்நியமனம் வழங்கும் நடைமுறையின் மூலம் மூன்று சமூகங்களுக்கும் சம உரிமை வழங்கப்பட்டுள்ளது. மூன்று சமூகங்களும் ஒன்றாக வாழ்ந்தால் தான் நாம் இந்நாட்டில் சமாதானத்தைக் கட்டியெழுப்ப முடியும்.
கிழக்கு மாகாணம் விடுவிக்கப்பட்டு அதன்பிறகு இம்மாகாணத்தில் தேர்தல் ஒன்று நடத்தப்படுவது சாத்தியமா? என்று ஒரு சிலர் கேள்வியெழுப்பியது மட்டுமன்றி இது ஒரு பகல்கனவு எனவும் கூறினார். ஆனால், நாங்கள் மிகத் தெளிவாக இருந்து இதனைச் செய்து காட்டி இன்று மாகாண சபையை உயிரோட்டமுள்ளதாக செயற்படுத்திக் கொண்டு வருகின்றோம்.
கிழக்கு மாகாண சபையின் கீழ் வாழும் எந்த சமூகத்திற்கும் அநீதி இழைக்கப்படமாட்டாது. எல்லோரும் சமமாக மதிக்கப்படுவர். கமநெகும வேலைத்திட்டத்தின் கீழ் பலகோடி ரூபா செலவில் கிழக்கை அபிவிருத்தி செய்ய நாம் திட்டமிட்டுள்ளோம்.
இங்கு நியமனங்களைப் பெற்றவர்கள் எவரும் குறித்த காலங்களுக்கு முன்னர் இடமாற்றம் கோருவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். தூர இடங்களுக்கு நியமனங்கள் கிடைத்திருப்பவர்களுக்கான போக்குவரத்து சேவையை இலகுபடுத்த மாகாண போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுக்கவுள்ளது எனவும் அவர் கூறினார்.
இந்நிகழ்வில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொகான் விஜயவிக்ரம, மாகாண அமைச்சர்களான ஏ.உதுமாலெப்பை, விமலவீர திசாநாயக்கா, எஸ்.நவரத்னராஜா உட்பட கிழக்கு மாகாண அமைச்சின் செயலாளர் உட்பட உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.