* முதன்மை வேட்பாளர் மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா தெரிவிப்பு
அநுராதபுர மாவட்டத்தில் உள்ள எல்லைக் கிராமங்களை பாதுகாப்பதற்கு எனது உயிரையும் துச்சமென மதித்து செயற்பட்டது ஒன்றே இம் மாகாணத்தில் முதலமைச்சராவதற்கு போதுமான தகைமையாகும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முதன்மை வேட்பாளர் மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா தெரிவித்தார்.
மிஹிந்தலையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் ;
ஒன்றரை வருட காலத்திக்கு முன்பே அரசாங்கம் வடமத்திய மாகாண சபையினைக் கலைத்து தேர்தலை நடாத்த முடிவு செய்தது தாம் செய்த பெரும் பிழை என்பதை தற்போது உணர்ந்துள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் அரசாங்கத்தின் மீது மக்களுக்கு பெருமளவு வெறுப்பை ஏற்படுத்தியுள்ளதால் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆதரவாளர்கள் பலர் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிக்க முன்வந்துள்ளனர். அரசாங்கக் கட்சி என்பதால் அவர்களின் பிரசாரக் கூட்டங்களுக்குச் செல்கின்ற போதும் வாக்களிக்கும் போது நிச்சயமாக ஐக்கிய தேசியக் கட்சிக்கே வாக்களிப்போம் என பல நூற்றுக்கணக்கானவர்கள் எம்மிடம் வாக்குறுதி அளித்து வருகின்றனர். நிச்சயமாக அரசாங்கத்துக்கு ஏமாற்றமளிக்கும் ஒரு தேர்தலாகவே இம் மாகாண சபைத்தேர்தல் அமையும்.
எனக்கு அநுராதபுரத்தில் வசிக்கக் கூட ஒரு வீடில்லை என்கின்றனர். நான் படைத்தளபதியாக இருக்கும் போது முறைகேடாக பணத்தை உழைத்திருந்தால் அநுராதபுரத்தில் மட்டுமல்ல இலங்கையில் எல்லாப்பாகங்களிலும் வீடுகளை வாங்கியிருக்கலாம். எனினும் நான் யுத்தத்தில் ஈடுபட்டது நாட்டு மக்களுக்காகவே நான் இங்கு வந்தது திரும்பிச் செல்லவல்ல எதிர்வரும் 24 ஆம் திகதி முதலமைச்சரானவுடன் அநுராதபுர மாவட்டத்தின் பிரஜை ஒருவராகிவிடுவேன் .
நான் இராணுவத்திலிருந்த போது யாழ்ப்பாணத்தில் புலிகளினால் சுற்றிவளைக்கப்பட்ட நிலையில் இருந்த நாற்பதாயிரத்துக்கு மேற்பட்ட படைவீரர்களை காப்பாற்ற முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா எனது தலைமையிலேயே படை ஒன்றை அனுப்பினார்.அதில் நான் வெற்றியும் கண்டேன். இன்று என்னை யார் என்று கேட்கும் அமைச்சர்மார் அன்று என்னை விடுதலை வீரர் எனப்போற்றியவர்கள்.
அதே போன்று வெலிஓயா இராணுவ முகாமைத் தாக்க வந்த இருநூறுக்கு மேற்பட்ட புலிகள் இயக்கத்தினரை கொன்று குவித்து புலிகளுக்கு பாடம் புகட்டியது எனது தலைமையிலான படைவீரர்களே. எனவே எதற்கும் நீங்கள் அஞ்சத் தேவையில்லை. இம்முறை நாமே வெற்றி பெறுவோம் இது நிச்சயம் என்றார்.