வன்னியில் பல பகுதிகளிலும் தொடரும் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக விவசாயிகளும் மாணவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
படையினரின் தாக்குதல்கள் காரணமாக முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு, துணுக்காய் போன்ற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பயிர்ச் செய்கைகள் யாவும் கைவிடப்பட்டுள்ளன.
வவுனிக்குளத்தின் கீழ் இவ்வாண்டு 3500 ஏக்கர் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டது. இப்பகுதி மீது படையினர் மேற்கொண்ட தொடர் தாக்குதல்களால், இப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட 3500 ஏக்கர் சிறுபோக நெற்செய்கை விவசாயிகளால் கைவிடப்பட்டு அழிவடைந்துள்ளது.
இதனைவிட, துணுக்காய், உயிலங்குளம், ஆலங்குளம், ஐயங்கன்குளம் போன்ற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கைகளும் சிறு தானிய செய்கைகளும் தோட்டப் பயிர்ச் செய்கைகளும் விவசாயிகளால் கைவிடப்பட்டு அழிவடைந்துள்ளன. இதனால், விவசாயிகள் பெரும் இழப்புகளைச் சந்தித்துள்ளனர்.
இது இவ்வாறிருக்க, படையினரின் தாக்குதல்களால் இடம்பெயர்ந்த பாடசாலைகள் முல்லைத்தீவு, திருமுறிகண்டி இந்து வித்தியாலயத்தில் இணைப்புப் பாடசாலைகளாக பெரும் இடர்களின் மத்தியில் இயங்கி வருகின்றன.
படையினரின் தாக்குதல் காரணமாக இடம்பெயர்ந்த பாலிநகர் மகா வித்தியாலயம், பாண்டியன்குளம் மகா வித்தியாலயம், யோகபுரம் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளும் அனிஞ்சியன்குளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை, கல்விளான் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை, வவுனிக்குளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை, பனங்காமம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை, மூன்று முறிப்பு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை, கூத்திமூலை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை போன்ற பாடசாலைகளும் இடம் பெயர்ந்து திருமுறிகண்டி இந்து வித்தியாலயத்தில் இணைப்புப் பாடசாலைகளாக இயங்கி வருகின்றன.
திரு முறிகண்டி இந்து வித்தியாலயத்தில் ஏற்கனவே 429 மாணவர்கள் கல்வி கற்று வந்தனர். தற்போது இடப்பெயர்வுகள் காரணமாக இடம்பெயர்ந்த 620 மாணவர்களும் இங்கு இணைந்து கல்வி கற்று வருகின்றனர்.
இந்நிலையில், குடிதண்ணீர், கழிப்பறை வசதிகளின்மை, வகுப்பறைகள் பற்றாக்குறை எனும் பல்வேறு நெருக்கடிகளின் மத்தியில் இப்பாடசாலையில் மாணவர்கள் தமது கற்றல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
இராணுவ நடவடிக்கை காரணமாக வன்னியில் 55 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதும் தெரிந்ததே.