வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய வருடாந்த தேர் உற்சவம் இன்று வியாழக்கிழமை காலை நடைபெறவுள்ளது.
தேர் உற்சவத்துக்குச் செல்லும் அடியார்களின் நலன்களைப் பேணுவதற்காக தெல்லிப்பழை சோதனைச் சாவடியில் விசேட கருமபீடமொன்று அமைக்கப்பட்டிருப்பதால் அடியார்கள், சிரமமின்றி ஆலயத்துக்கு செல்ல வசதி செய்யப்பட்டிருப்பதாக இப்பிரதேசத்துக்கான இராணுவ கட்டளை அதிகாரி தெரிவித்துள்ளார்.
அடியார்கள், ஆலயத்துக்கு செல்வதற்கு, தமது தேசிய அடையாள அட்டையை தெல்லிப்பழை சோதனைச் சாவடி பாதுகாப்பு அதிகாரியிடம் ஒப்படைத்துவிட்டு, விசேட அனுமதியட்டையைப் பெற்று ஆலயம் செல்ல முடியும். கமரா, வீடியோ, மின்னியல் உபகரணங்களையோ, கையடக்க தொலைபேசிகளையோ ஆலயவளாகப் பிரதேசத்துக்குள் எடுத்துச் செல்ல அனுமதிவழங்கப்பட மாட்டாது. எனினும் ஊடகவியலாளர்கள் தமது தொழில் உபகரணங்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவர்.
வசந்த மண்டப பூஜை காலை 9 மணிக்கு இடம்பெற்று 10 மணிக்கு சுவாமி தேரில் ஆரோகணம் செய்வார் என ஆலய தர்மகர்த்தா சபையினர் தெரிவித்தனர். அடியார்களுக்கு இலங்கை சீமெந்து கூட்டுத்தாபன யாழ்ப்பாண பணியாளர்கள் அன்னதானம் வழங்க ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.