மடு மாதா தேவாலயப்பகுதிக்கு நேற்று புதன்கிழமை அமைச்சர்கள் குழுவொன்று விஜயம் செய்து அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்துள்ளது.
அத்துடன், மன்னாரில் ஆயர் இல்லத்திற்கும் சென்று அங்கு வைக்கப்பட்டுள்ள மடுமாதா திருச்சொரூபத்தையும் அவர்கள் வழிபட்டனர். அமைச்சர்களான பண்டு பண்டாரநாயக்க, மில்றோய் பெர்னாண்டோ, திஸ்ஸ கரலியத்தை, பீலிக்ஸ் பெரேரா, ஜயந்த திசேரா மற்றும் சரத் ரணவக்க ஆகிய அமைச்சர்கள் குழுவினரே அங்கு விஜயம் செய்திருந்தனர்.
மடுமாதா தேவாலயத்தில் எதிர்வரும் ஆவணித்திருவிழாவை கொண்டாடுவது தொடர்பாக இவர்கள் ஆயருடன் கலந்துரையாடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கம்பஹா மாவட்ட ஐக்கிய தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயலத் ஜெயவர்த்தனவும் மடுவுக்கு சென்றிருந்தார்.
ஆயர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள மடுமாதாவின் திரூச்சொருபத்தையும் அவர் வழிபட்டதுடன் மன்னார் ஆயர் மற்றும் குருக்களையும் சந்தித்து உரையாடினார்.
மடு மாதா தேவாலய ஆவணித்திருவிழா 6 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 15 ஆம் திகதி முடிவடைவது வழக்கமாகும்.
இம்முறை இத்திருவிழாவை கொண்டாட வேண்டும் என அரச தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால், அங்கு அமைதியான சூழல் ஏற்பட்டு இப்பிரதேசத்தை யுத்த சூனியப்பிரதேசமாக இரு தரப்பினரும் அறிவித்தால் மட்டுமே திருவிழாவை கொண்டாட முடியும் எனவும் மன்னார் ஆயர் தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.