* உயர்நீதிமன்றம் அறிவிப்பு
கொழும்பு கொம்பனிவீதி கிளனி ஒழுங்கையில் ரயில் பாதையின் இரு மருங்கிலுமுள்ள சட்டவிரோத குடியிருப்புகளை எந்நேரத்திலும் அங்கிருந்து அகற்றுவதற்கான அதிகாரம் அரசுக்குள்ளதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சார்க் மாநாட்டு பாதுகாப்பை முன்னிட்டு கிளனி ஒழுங்கையிலுள்ள மக்கள் குடியிருப்புகளை அப்புறப்படுத்துவதற்கு கடந்த வார முற்பகுதியில் உயர்நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை விதித்திருந்தபோதும், பொலிஸாரின் உதவியுடன் நகர அபிவிருத்தி அதிகார சபை தகர்த்தழித்தது.
இந்த நிலையில் கிளனி ஒழுங்கையைச் சேர்ந்த சிலர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பாக நேற்று உயர்நீதிமன்றில் பரிசீலனை செய்யப்பட்டது.
இதன்போதே, இங்குள்ள சட்டவிரோத குடியிருப்புகளை அரசு எந்நேரத்திலும் அங்கிருந்து அகற்றுவதற்கான அதிகாரம் அரசுக்கு உள்ளதாக உயர்நீதிமன்ற நீதியரசர்களான அசோக டி சில்வா, சலீம் மர்சூக், பி.ஏ.ஏக்கநாயக்க ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இதனால் அடுத்த மாதம் 19 ஆம் திகதிக்கு முன் இந்தப் பகுதி மக்கள் நகர அபிவிருத்தி அதிகார சபையுடன் கலந்துரையாடி பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டுமெனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதேநேரம், இப்பகுதி மக்களை அப்புறப்படுத்துவதற்கான சட்டத்தை பயன்படுத்தாது, குண்டர்களின் உதவிகளைப் பெற இடமளிக்கக்கூடாதென மனுதாரர்களின் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி உப்புல் ஜெயசூரிய தெரிவித்தார்.
இதேநேரம், இவர்களுக்கு மாற்று இருப்பிடம் வழங்க அரசு தீர்மானித்துள்ளதாகவும் அதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அரசு தரப்பு சிரேஷ்ட சட்டத்தரணி பாலித ரணசிங்க தெரிவித்தார்.
குடியிருப்பாளர்களுக்கு தெமட்டகொட பகுதியில் குடியிருப்புப் பகுதிகளை வழங்குவதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை உறுதிசெய்து அவர்களுக்கான குடியிருப்புகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசு தரப்பு சட்டத்தரணிக்கு உயர்நீதிமன்றம் ஆலோசனை வழங்கியது.