மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. த.கனகசபையின் மெய்ப்பாதுகாவலர் மீது நேற்று புதன்கிழமை மாலை மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சியிலிருந்து அவர் தப்பியுள்ளார்.
மட்டக்களப்பு எருவில் பகுதியிலுள்ள மெய்ப்பாதுகாவலரின் வீட்டிற்கு நேற்று மாலை 5 மணியளவில் சென்ற ஆயுதபாணிகள் அவர் மீது பலத்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.
எனினும், ஆயுதபாணிகளின் கொலை முயற்சியிலிருந்து தப்பிய இவர் காலில் படுகாய மடைந்த நிலையில் களுவாஞ்சிக்குடி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து மட்டக்களப்பு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார்.
மூன்று பிள்ளைகளின் தந்தையும் பொலிஸ் கான்ஸ்டபிளுமான கந்தசாமி சுதாகரன் (35 வயது) என்பவரே படுகாயமடைந்தவராவார்.
மட்டக்களப்பு களுதாவளையிலுள்ள கனகசபை எம்.பி.யின் வீட்டுப் பாதுகாப்புக்கு பொறுப்பான இவர் அங்கிருந்து மட்டுநகருக்கு தெற்கேயுள்ள எருவில் பகுதியிலிருக்கும் தனது வீட்டிற்குச் சென்றிருந்த போதே இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.