*சென்னையில் இலங்கை தூதரகம் முற்றுகை; ஆயிரக்கணக்கானோர் கைது
இலங்கைத் தமிழர் பிரச்சினையை தீர்ப்பதனூடாகவே இந்திய மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண முடியுமென்பதை வலியுறுத்தியும் கொழும்பில் நடைபெறும் சார்க் மாநாட்டில் இந்தியப் பிரதமர் இதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமெனக் கோரியும் சென்னையிலுள்ள இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிட்டும் போராட்டம் நடத்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் ராஜா உட்பட ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.
நேற்று புதன்கிழமை காலை 10.30 மணியளவில் நடைபெற்ற இந்த முற்றுகைப் போராட்டம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில துணைச் செயலாளர் சி.மகேந்திரன் "தினக்குரல்'க்கு தெரிவித்ததாவது;
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தினமும் சுட்டுப் படுகொலை செய்யப்படுகின்றனர். இதனைத் தடுத்து நிறுத்துமாறு நாம் பல போராட்டங்களை நடத்திவிட்டோம். ஆனால், மத்திய அரசு இது தொடர்பில் கவனம் எடுக்காததால் இலங்கை கடற்படை தனது வேட்டையை தொடர்கிறது.
தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டுமானால் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். இதனை வலியுறுத்தியும் கொழும்பில் நடைபெறும் சார்க் மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், இலங்கைத் தமிழர் பிரச்சினை மற்றும் தமிழக மீனவர் பிரச்சினை தொடர்பில் இலங்கை ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென்பதை வலியுறுத்தியுமே இந்த முற்றுகைப் போராட்டத்தை நடத்தினோம்.
சென்னையிலுள்ள இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிட்டு அவர்கள் எவரையும் வெளியே வரவிடாது தடுப்பதே எமது போராட்டத்தின் நோக்கமாகும். எமது முற்றுகைப் போராட்ட அழைப்பையேற்று ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் ஒன்று திரண்டனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் ராஜா, செயலாளர் தா.பாண்டியன், துணைச் செயலாளராகிய நான், நல்லகண்ணு மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களான சிவு புண்ணியம், குணசேகரன், ராமசாமி, பத்மாவதி, உலகநாதன் உட்பட பெருமளவானோர் இந்தப் போராட்டத்தில் பங்குபற்றினார்கள்.
எமது போராட்ட அறிவிப்பையடுத்து தமிழக அரசு பொலிஸார் மூலம் இலங்கைத் தூதரகத்தை சுற்றி கடும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ததுடன், எம்மை நுழையவிடாதவாறு தடைகளையும் ஏற்படுத்தியது. இதனால் எமக்கும் பொலிஸாருக்குமிடையே இழுபறிகளும் கடும் வாக்குவாதமும் ஏற்பட்டது. இந்நிலையில், அங்கு திரண்டிருந்த பொலிஸார் எம் அனைவரையும் கைது செய்தனர்.
அதன் பின்னர் பொது இடமொன்றில் எம்மை தடுத்துவைத்துவிட்டு விடுதலை செய்துவிட்டனர். ஆனாலும், இலங்கைத் தமிழர்களுக்காகவும் தமிழக மீனவர்களுக்காகவும் நாம் எமது போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளோம்.
இரு நாடுகளுக்கும் சொந்தமான கடலை இலங்கை தனது இராணுவ நடவடிக்கைகளுக்காக பாவிப்பதை ஒருபோதும் எம்மால் அனுமதிக்க முடியாது. நாம் இலங்கைத் தமிழர்களுடன் தொப்புள் கொடி உறவை வைத்துள்ளவர்கள்.
முன்னர் அவர்களுடனான திருமண பந்தங்கள் கூட எம்மிடையே உண்டு. அப்போது இலங்கை இந்தியாவிடையேயான கடல் எல்லை பிரிக்கப்படவில்லை. ஆனால், இப்போது இலங்கையரசு தனது இராணுவ நடவடிக்கைகளுக்காக கடலைப் பயன்படுத்துகிறது.
தமிழக மீனவர் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமானால் இலங்கைத் தமிழர் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். இதனையே நாம் இந்தியப் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளோம்.