* கிழக்கு மாகாண சுகாதாரத்துறை ஆலோசகர் டாக்டர் வீ.ஜெகநாதன்
""பல கோடி ரூபா செலவில் சகல வசதிகளையும் கொண்ட வைத்தியசாலைகளை நிறுவினாலும் பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் எந்த வைத்தியசாலையையும் அபிவிருத்தி செய்வது கடினமான காரியமாகும்.' இவ்வாறு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைச் சிசு பராமரிப்பு, மகப்பேற்று பிரிவு மற்றும் பெண் நோயியற் கட்டிடத் திறப்பு விழாவில் உரையாற்றிய கிழக்கு மாகாண சுகாதாரத்துறை ஆலோசகர் டாக்டர் வீ.ஜெகநாதன் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில்;
வைத்தியசாலைகளைப் பொறுத்தளவில் அதற்கு தேவையான மருந்துகள், உபகரணங்கள், வைத்தியர்கள் மற்றும் தாதியர் போன்றவற்றை அரசிடம் இருந்தோ உதவி வழங்கும் நிறுவனங்களில் இருந்தோ பெற்றுக்கொள்ள முடியும். அதனை சரியான முறையில் பயன்படுத்துவதோடு வைத்தியசாலையை ஒரு ஆரோக்கியமான சூழ்நிலையில் வைத்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு பொதுமக்களையே சாரும்.
இன்று சில வைத்தியசாலைகளில் வேலை செய்பவர்கள் குழுக்களாக இயங்கி வைத்தியருக்கு சார்பாக ஒரு சாராரும் ஊழியர்களுக்கு சார்பாக ஒரு சாராரும் இயங்கி வைத்தியசாலையின் நடவடிக்கைகளை முடக்க முற்படுகின்றார்கள். இப்படியான செயற்பாடுகள் முற்றாகக் களையப்பட்டு எல்லோரும் ஒரு குடும்பமாகச் செயற்பட்டால் மட்டுமே எந்த வைத்தியசாலையையும் அபிவிருத்தி செய்ய முடியும்.
கல்முனை பிரதேசத்தில் 1 கிலோ மீற்றர் தூரத்திற்குள் இரண்டு சுகாதார வைத்தியசாலைகள் அமைந்திருந்தாலும் இவை மக்களின் சுகாதார செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதில் பாரிய பங்காற்றுகின்றன.
இந்த அரசாங்கம் பொதுமக்களின் சுகாதார சேவையினை இலகுபடுத்துவதற்காக பலவிதமான செயற்பாடுகளை தற்போது துரிதமாக மேற்கொண்டு வருகின்றது. ஒருங்கிணைந்த ஒரு சுகாதார சேவை மக்களுக்கு கிடைப்பதுடன் மக்கள் சந்தோஷமாகவும் ஆரோக்கியமாகவும் வாழ வேண்டும் என்பதே எல்லோரினதும் ஆசையாகும்' என்றார்.