-டிட்டோ குகன்-
யாழ்.மாவட்ட பாடசாலைகளுக்கு 2009 ஆம் ஆண்டுக்கான பாடப் புத்தகங்கள் கொழும்பிலிருந்து கப்பல் மூலமாக இன்று வெள்ளிக் கிழமை அனுப்பி வைக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கான நிகழ்வுகள் வைபவ ரீதியாக இன்று முற்பகல் 11 மணிக்கு கொழும்பு துறைமுகத்தின் பண்டாரநாயக்கா இறங்குதுறையில் நடைபெறவுள்ளது.
யாழ்.மாவட்டத்திலுள்ள 14 வலயக் கல்வி அலுவலகங்களின் கீழுள்ள பாடசாலைகளுக்கு மொத்தமாக 8 இலட்சத்து 42 ஆயிரத்து 326 பாடப் புத்தகங்கள் தேவைப்படுவதாக கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இதில் முதற்கட்டமாக 6 இலட்சத்து 14 ஆயிரத்து 974 பாடப் புத்தகங்கள் முதலாவது கப்பலில் இன்று அனுப்பி வைக்கப்படவுள்ளது.
எஞ்சிய 2 இலட்சத்து 27 ஆயிரத்து 352 பாடப் புத்தகங்களும் இரண்டாவது கட்டமாக எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி கப்பல் மூலம் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்படும் பாடப் புத்தகங்கள் கீழ்க்காணும் வகையில் பாடசாலைகளுக்கு பகிர்ந்தளிக்க கல்வி அமைச்சின் வெளியீட்டுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்திருப்பதாக கல்வி அமைச்சு விடுத்திருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு 7686, வேம்படி மகளிர் கல்லூரிக்கு 9376, யாழ்ப்பாணம் இந்து கல்லூரிக்கு 9605, சாவகச்சேரி இந்துக் கல்லூரிக்கு 8580 ஆகிய எண்ணிக்கையில் பாடப் புத்தகங்கள் நேரடியாக பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.
இதேநேரம், யாழ்ப்பாண வலயக் கல்வி அலுவலகத்துக்கு 51,391, நல்லூர் வலயக் கல்வி அலுவலகத்துக்கு 76,013, கோப்பாய் வலயக் கல்வி அலுவலகத்துக்கு 67,591, உடுவில் வலயக் கல்வி அலுவலகத்திற்கு 38,803, தெல்லிப்பழை வலயக் கல்வி அலுவலகத்திற்கு 44,914 சண்டிலிப்பாய் வலயக் கல்வி அலுவலகத்திற்கு 46, 090, சங்கானை வலயக் கல்வி அலுவலகத்துக்கு 43,791, பருத்தித்துறை வலயக் கல்வி அலுவலகத்திற்கு 48,476, கரவெட்டி வலயக் கல்வி அலுவலகத்திற்கு 47, 585, மருதங்கேணி வலயக் கல்வி அலுவலகத்திற்கு 5,148, சாவகச்சேரி வலயக் கல்வி அலுவலகத்திற்கு 61,700, வேலணை வலயக் கல்வி அலுவலகத்திற்கு 19,014, ஊர்காவற்றுறை வலயக் கல்வி அலுவலகத்துக்கு 23,807, நெடுந்தீவு வலயக் கல்வி அலுவலகத்துக்கு 5,404 ஆகிய எண்ணிக்கையிலான பாடப் புத்தகங்கள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.