* பிரதியமைச்சர் புத்திரசிகாமணி
-ரொஷான் நாகலிங்கம்-
நியாயத்தை சட்டத்தரணிகள் மூலம் நீதிமன்றத்தில் முன்வைத்து நீதியை பெறமுடியாதவர்களுக்கு சட்ட உதவி நிலையம் மூலம் நன்மைகளைப் பெறமுடியுமென நீதி சட்ட மறுசீரமைப்பு பிரதியமைச்சர் வீ.புத்திரசிகாமணி தெரிவித்தார்.
கல்கிசை நீதிமன்ற வளாகத்தில் சட்ட உதவி நிலையத்தை நேற்று வியாழக்கிழமை மாலை திறந்து வைத்துப் பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் பேசுகையில்;
நீதிமன்றங்களில் ஏழை மக்கள் தமது நியாயப்பாடுகளை முன்வைத்து தாம் குற்றவாளிகள் அல்ல. சுற்றவாளிகள் என்பதை வெளிப்படுத்த முடியாமலுள்ளனர். இதற்குக் காரணம் வழக்கறிஞர்களுக்கான கட்டணத்தை செலுத்த முடியாததன் நிமிர்த்தம் அவர்கள் நீதிமன்றங்களில் வாதாடுவதற்கு முன்வராமையேயாகும்.
நான் அண்மையில் பதுளை சிறைச்சாலைக்கு சென்றேன். அங்கிருக்கும் பலருடன் கதைத்தேன். இவர்கள் தமது நியாயப்பாடுகளை முன்வைக்காமையினால் சிறைவாசம் அனுபவிப்பதாக தெரிவித்தனர். அவர்களது கதையை கேட்கும்போது வேதனையாகவுள்ளது. இதுபோன்று பலர் தமது நியாயப்பாடுகளை முன்வைக்காத சுற்றவாளிகள் சிறைவாசம் அனுபவிக்கின்றனர். இந்த நிலைமை மாற்றியமைக்கப்பட வேண்டும்.
குறிப்பாக தமிழ் மக்கள் மொழிப் பிரச்சினை காரணமாக தமது பக்கம் உள்ள நியாயத்தை எடுத்துரைக்க முடியாதுள்ளனர். உதாரணமாக பிரபாகரனின் கடந்த வருட பிறந்த தினத்தன்று பதுளையிலிருந்து கொழும்புக்கு வந்த இரு இளைஞர்கள் கொழும்பில் வைத்து கைதுசெய்யப்பட்டனர்.
இதற்கு காரணம் அவர்களுக்கு பிரபாகரன் என்று பெயர் உள்ளதேயாகும். எனினும் அவர்களுக்கு பிரபாகரனுடன் எந்தத் தொடர்போ சம்பந்தமோ இல்லாத நிலையில் பல மாதங்களாக சிறைவாசம் அனுபவிக்கின்றனர்.
இவர்களை முழுமையாக விசாரித்து தீர்ப்பு வழங்கியிருந்தால் வெளியிலிருப்பர். இந்த சிக்கலான நிலையை மாற்றியமைக்கவும் ஏழைகளுக்கு சட்ட ரீதியான உதவியை வழங்குவதற்குமே நாடு பூராகவும் சட்ட உதவி நிலையங்கள் திறந்து வைக்கப்படுகின்றன.
இதேவேளை, நீதிவான்களுக்கும் சட்டத்தரணிகளுக்குமிடையில் வழக்காடும்போது உரையாடுவது தொடர்பில் புரியாத நிலை காணப்படுகிறது. இந்த நிலைமையை மாற்றியமைத்து மக்களுக்கு அடிப்படை சட்டத்தை புரிந்து கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இன்று கல்கிசை நீதிமன்றத்தில் திறக்கப்படும் இந்த சட்ட உதவி நிலையம் மூலம் சட்டத்தரணிகளை ஏற்பாடு செய்ய முடியாதவர்கள் இங்கு நன்மைகளை பெற்றுக்கொடுக்க முடியும். படிப்படியாக இவ்வாறான நிலையங்களை ஏனைய இடங்களிலும் அமைக்கவுள்ளோம் என்றார்.