* திறைசேரி செயலாளர்
அடுத்த வருடத்துக்கான வரவு செலவுத்திட்டத்தில் யுத்தத்துக்காக பெருமளவு நிதி ஒதுக்கப்படவிருப்பதாக திறைசேரி செயலாளர் பி.பி.ஜெயசுந்தர தெரிவித்தார்.
நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதனைத் தெரிவித்த ஜெயசுந்தர, அநாவசிய செலவினங்களை தவிர்க்குமாறு அமைச்சருக்கு அறிவுருத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், அடுத்த வருடத்தில் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதும், 2010 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில், யுத்தத்தால் சேதத்துக்குள்ளான பகுதிகளை மீளக் கட்டியெழுப்பவென பெருமளவு நிதி ஒதுக்கப்படுமென்றும் அவர் குறிப்பிட்டார்.
அமைச்சரவை கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றிய ஜெயசுந்தர மேலும் தெரிவிக்கையில், புதிய வரவு செலவுத்திட்ட அறிக்கை அமைச்சரவையின் ஆலோசனைக்காக முறையாக தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்த நிலையில் அரசாங்கம், உமா ஓயா அபிவிருத்தி, நுரைச்சோலை அனல் மின் திட்டம் போன்ற பாரிய அபிவிருத்தித் திட்டங்களையும் முன்னுரிமை அடிப்படையில் அவற்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளது.
தற்போது நடைபெறுகின்ற இந்த யுத்தம் முடிவடைந்ததும், அபிவிருத்தித் திட்டங்கள் சிறந்த முறையில் முன்னெடுக்கப்படவுள்ளன. சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்தின் போது புதிய நிதியீட்டு வழிமுறைகளை ஆலோசனையாக முன்வைக்குமாறு நான் அமைச்சர்களை கேட்டுக் கொள்கிறேன்.
உள்நாட்டில் பெறப்படும் கடனுக்கான வட்டியுடன் ஒப்பிடும் போது வெளிநாட்டுக் கடனுக்கான வட்டி குறைவாக இருப்பதால், வெளிநாட்டில் இருந்தே கடன்களைப் பெற்று வருகின்றோம்.
இவ்வாறு பெறப்படும் நிதியில் பெருமளவு பணம் அமைச்சுகளுக்கான உத்தியோகத்தர்கள் நியமனம், அவர்களுக்கான சம்பளங்கள், ஓய்வூதியக் கொடுப்பனவுகளுக்காகவே செலவாகின்ற நிலையில் இது சிக்கலான பிரச்சினையாக தொடர்ந்து இருந்து வருகிறது.
பல காரணங்களால் இன்று அபிவிருத்திக்கென உதவியாக கிடைக்கும் நிதி முறையாகப் பயன்படுத்தப்படுவதில்லை. இந்த நிலைமை குறித்து அமைச்சர்கள் அவசியம் கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறான திட்டங்கள், நிதி மோசடி வழக்குகளாக நீதிமன்றம் பெற்றுள்ளதையே காணக்கூடியதாக உள்ளது.
தற்போது அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கவென 5 பில்லியன் ரூபா நிதி கிடைத்துள்ள அதேவேளை குழாய் பொருத்துவதற்கான மற்றொரு திட்டத்திற்காக 5 பில்லியன் ரூபா நிதியும் கிடைத்துள்ளது.
ஏற்கனவே சுகாதார அமைச்சர் தமது அமைச்சுக்கான திட்டத்தை தயாரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.