வவுனியா பொதுவைத்தியசாலைக்கான புதிய கட்டிடத் தொகுதி திறப்பு விழாவில் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு திட்டமிடப்பட்ட வகையில் அழைப்பு விடுக்கப்படாமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கடுமையான ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் புதிய வெளிநோயாளர் பிரிவு, சிகிச்சைப் பிரிவுகளுக்கான கட்டிடத் தொகுதி திறப்பு விழா நாளை 6 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறுகின்றது.
வடமாகாண ஆளுநர் விக்டர் பெரேராவின் அழைப்பின் பேரில் அனர்த்த நிவாரண சேவைகள் மீள் குடியேற்ற அமைச்சர் றிஷாத் பதியுதீன் ஜனாதிபதியின் ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ ஆகியோர் இக்கட்டிடத் தொகுதியைத் திறந்து வைக்கவுள்ளனர்.
எனினும், வன்னி மாவட்ட மக்கள் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களும் திட்டமிட்ட வகையில் இந்நிகழ்வில் கலந்து கொள்ளாதவாறு புறுக்கணிக்கப்பட்டுள்ளனர்.
சாதாரண சிறிய விடயங்களில் கூட தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழத் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை ஓரங்கட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் தமிழ் மக்களின் நியாயமான உரிமைகளை ஒரு போதும் வழங்காது என்பதையே தொடரும் ஒவ்வொரு சம்பவங்களும் தெளிவுபடுத்துகிறது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், வினோநோகராதலிங்கம், சிவநாதன் கிஷோர், ரி.கனகரட்ணம் ஆகியோர் தமது கடுமையான ஆட்சேபனையை தெரிவித்துள்ளனர்.