* சாடுகிறது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம்
-ரொஷான் நாகலிங்கம்-
அரசாங்கம் தோட்டப் பகுதி வைத்தியசாலைகளை அரச வைத்தியசாலைகளாக பெயரளவிற்கு மாத்திரம் மாற்றாமல் தோட்ட மக்களுக்கு சிறந்த சேவையை பெற்றுக்கொடுக்கும் வைத்தியசாலைகளாக மாற்ற வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் கோரியுள்ளது.
அத்துடன், இதனை தேர்தல் பிர சாரத்துக்கு பயன்படுத்தாமல் ஆரோக்கியமான பெருந்தோட்ட சமூகத்தை உருவாக்க முன்வர வேண்டுமெனவும் கோரியுள்ளது.
இது தொடர்பில் கொழும்பு தேசிய நூலகத்தில் நேற்று வியாழக்கிழமை இச்சங்கம் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் அதன் தலைவர் இராமலிங்கம் சந்திரசேகரன் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்;
பெருந்தோட்டப் பகுதிகளின் சுகாதார நிலைமை மோசமான பாதிப்பினை எதிர்கொண்டு வருகின்றது. இது விடயத்தில் அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் தொடர்ச்சியாகப் போராட்டங்களை முன்னெடுத்து வந்துள்ளது. இதற்குக் காரணம் அங்குள்ள தோட்ட வைத்தியசாலைகளில் மனித வளம் உட்பட அனைத்து வளங்களும் பற்றாக்குறையாகவுள்ளமையாகும்.
ஆரோக்கியமான மனித சமூகத்தை கட்டியெழுப்புவதே சுகாதார துறையின் குறிக்கோளாகவுள்ள நிலையில் பெருந்தோட்ட சமூகம் தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக இது விடயத்தில் கவனிப்பாரற்றே இருந்து வந்துள்ளது. இதனால் நாட்டின் இறப்பு வீதம் 5.9 ஆகவுள்ள நிலையில் தோட்டப் பகுதியில் இது 4.8 ஆகும். இதேபோல், பிரசவத்தின் போது தாய் இறப்பு விகிதம் தோட்டப் பகுதியில் 4.5 ஆகவுள்ள நிலையில் நாட்டில் 2.3 ஆகவுள்ளது.
இது நாட்டின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடும்போது மிக உயர்வாகவுள்ளது. இதே நிலைமை குழந்தைகள் இறப்பு வீதம் மற்றும் எடை குறைந்த வளர்ச்சி குன்றிய பிறப்பு வீதத்திலும் காணப்படுகின்றது. குறிப்பாக பெருந்தோட்டப் பகுதியில் குருதிச்சோகையினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். இது 20 வயதுக்கும் 45 வயதுக்குமிடைப்பட்ட பெண்கள் 35%மாகும். அதேபோல் 9 மாத சிசுவுக்கும் 6 வயதுக்குமுட்பட்ட பிள்ளைகளில் 42% மாகவும் காணப்படுகின்றது.
பெருந்தோட்டப் பகுதி சுகாதாரத்தை மேம்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தேர்தலின்போது குறிப்பிட்டுள்ளதுடன் தனது மகிந்த சிந்தனையிலும் தெரிவித்துள்ளார். இவ்வாறான நிலைமையில் தற்போது தோட்ட வைத்தியசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்கின்றது.
அரசாங்கம் தோட்ட வைத்தியசாலையை அரசவைத்தியசாலையாக பெயரளவில் மாற்றாமல் ஒரு வைத்தியசாலைக்கு தேவையான அனைத்து வளங்களையும் பெற்றுக்கொடுத்து உரியமுறையில் செயற்பட வழிவகுக்க வேண்டுமென்பதே எமது நிலைப்பாடாகவுள்ளது. இதை விடுத்து ஏமாற்றும் வகையில் செயற்பட வேண்டாமென்பதே எமது கோரிக்கையாகவுள்ளது.
முதல் கட்டமாக அரசாங்கம் இரத்தினபுரியில் கடந்த மாதம் தோட்ட வைத்தியசாலைகளை பொறுப்பேற்றது. இதற்குக் காரணம் சப்ரகமுவ மாகாண சபை தேர்தலாகும். இப்போது ஊவா மாகாணத்தில் 12 வைத்தியசாலைகளை பொறுப்பேற்றுள்ளது. தற்போது மாகாண சபைகள் கலைக்கப்பட்டு தேர்தல் நடைபெறவுள்ளதாக பேசப்படும் நிலையிலேயே இங்கு அரசு பொறுப்பேற்றுள்ளது.
அரசாங்கம் தேர்தல் பிரசாரத்துக்கு தோட்ட வைத்தியசாலைகளை பொறுப்பேற்காமல் நாட்டின் பொருளாதாரத்துக்கு 180 வருடங்களாக உழைக்கும் 15 வீத சீரான வருமானத்தை பெற்றுக்கொடுக்கும் தொழிலாளர்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தேவையான வளங்களை பெற்றுக்கொடுக்க வேண்டுமென்பதே எமது வேண்டுகோளாகும் என்றார்.