* தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை
வன்னி மக்களின் பாதுகாப்பை ஐ.நா.உறுதிப்படுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, இலங்கை அரசு மீது தமிழ் மக்களுக்கு எவ்வித நம்பிக்கையுமில்லையெனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
அகதிகளுக்கான ஐ.நா.உயர் ஸ்தானிகராலயத்தின் யு.என்.எச்.சி.ஆர்.இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி நீல்புகுனியை நேற்று வியாழக்கிழமை மாலை சந்தித்த போதே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இவ்வாறு வலியுறுத்தியுள்ளது.
நேற்றுமாலை 5.30 மணி முதல் 6.30 மணிவரை ஐ.நா.உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்பில் அதன் பாராளுமன்றக் குழுத்தலைவர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இச்சந்திப்பின் போது, வன்னிமக்களின் தற்போதைய அவலநிலை குறித்து வதிவிடப் பிரதிநிதிக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் விரிவாக விளக்கினர்.
அவர்கள் வன்னிமக்களின் நிலைமை தொடர்பாக கூறுகையில்,
வன்னியில் 2 இலட்சம் மக்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்குவதற்கு இடமின்றி மரங்களுக்கு கீழும் காடுகளிலும் தஞ்சமடைந்துள்ளனர். உண்ண உணவின்றி பட்டினியால் வாடுகின்றனர். சுகாதார வசதிகளோ, உதவிகளோ அவர்களுக்கு கிடைப்பதில்லை.
வன்னி மக்களின் பாதுகாப்பை ஐ.நா.வே உறுதிப்படுத்த வேண்டும். இலங்கை அரசு வன்னி மக்களுக்கு எந்தவித உதவிகளையும் செய்யவில்லை. செய்யப் போவதுமில்லை. அத்துடன் இலங்கையரசு மீது தமிழ் மக்களுக்கு நம்பிக்கையுமில்லை.
விமானத்தாக்குதல்கள், ஷெல்தாக்குதல்கள், பல்குழல் ரொக்கட் தாக்குதல்களால் மக்கள் கொல்லப்படுகின்றனர். அவர்களின் வாழ்விடங்கள் அழிக்கப்படுகின்றன. இதனால் அவர்கள் அகதிகளாக அலைகின்றனர்.
வன்னியில் அனைத்து நடவடிக்கைகளும் செயலிழக்கும் நிலைக்கு வந்துள்ளன. பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. பல பாடசாலைகள் அகதிமுகாம்களாகமாறியுள்ளன. எனவே இது விடயத்தில் ஐ.நா.உடனடி நடவடிக்கையெடுக்க வேண்டுமென வலியுறுத்தினர்.
இதற்கு பதிலளித்த வதிவிடப் பிரதிநிதி நீல்புகுனி,
வன்னியில் இடம் பெயர்ந்த மக்களுக்கு தேவையான உணவு, மருந்து, தங்குமிடவசதிகளை செய்ய நாம் எவ்வேளையிலும் தயாராகவேயுள்ளோம்.
வன்னியில் ஒன்றரை லட்சம் மக்கள் இடம் பெயர்ந்துள்ளதாக எமக்கு புள்ளி விபரங்கள் கிடைத்துள்ளன. இது தொடர்பில் நாம் எமது தலைமையகத்துக்கும் தெரியப்படுத்தியுள்ளோம். இது குறித்து நாம் தேவையான நடவடிக்கைகளை எடுப்போம் என்று கூறினார்.
தான் கிளிநொச்சிக்கு நேரில் சென்று அகதிகளின் நிலைமை குறித்து அவதானித்ததாகவும் அவர் தெரிவித்தார்.