* அரசாங்கம் அறிவிப்பு
-எம்.ஏ.எம். நிலாம்-
வடக்கில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் சிக்கியிருக்கும் அப்பாவித் தமிழ் மக்களை அவர்களின் பிடியிலிருந்து மீட்டெடுக்கும் மனிதாபிமான நட வடிக்கைகளில் பாதுகாப்புத் தரப்பு தீவிரமாக ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்திருக்கும் அரசாங்கம், புலிகள் கேடயமாகப் பயன்படுத்தும் அப்பாவி மக்களை ஏதோவொரு மார்க்கத்தில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரிவுக்கு அழைத்து வருமாறு ஜனாதிபதி படைத்தரப்புக்கு பணிப்புரை விடுத்திருப்பதாகவும் குறிப்பிட்டது.
அரசாங்கத் தகவல் திணைக்களக் கேட்போர் கூடத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்தச் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சரவைப் பேச்சாளர் தகவல் ஊடக அமைச்சர் அநுர பிரியதர்ஷண யாப்பா மேற்கண்டவாறு தகவலை வெளியிட்டார்.இது தொடர்பாக மேலும் விளக்கமளித்த அமைச்சர் அநுர பிரியதர்ஷண யாப்பா கூறியதாவது;
""ஜனாதிபதி விடுத்த உத்தரவுக்கமைய இராணுவத்தினர் வடக்கில் மனிதாபிமான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. வடபகுதியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் மனிதக் கேடயங்களாக சிக்கியிருக்கும் அப்பாவி மக்களை உடனடியாக மீட்டெடுத்து அரசாங்க சிவில் நிருவாக பகுதிக்குள் கொண்டு வந்து அந்த மக்கள் அச்சமின்றி இயல்பு வாழ்க்கையை மேற்கொள்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ படையினருக்குப் பணிப்புரை விடுத்திருந்தார்.
அதற்கமைய படையினர் வடபகுதியில் புலிகளிடம் சிக்கியுள்ள சகல மக்களையும் மாற்று வழியொன்றின் மூலம் இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் அழைத்து வருவது குறித்து படைத் தரப்பு தீவிர கவனம் செலுத்தி வருகின்றது.
ஆரம்ப நடவடிக்கையாக படையினர் பெருந்தொகையான துண்டுப் பிரசுரங்களை அப்பகுதியில் விமானமூலம் வீசியுள்ளனர். புலிகள் பகுதியில் சிக்கியுள்ள மக்களுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாதவாறு அவர்களைக்காப்பாற்றும் ஒரு வியூகத்தை கையாள்வதில் படைத்தரப்பு கவனம் செலுத்தி வருகின்றது.
விடுதலைப்புலிகளுக்கு எதிரான படைநடவடிக்கைகளால் அப்பாவி மக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்வதில் படையினர் கவனமாக இருக்கின்றனர். புலிகளின் இலக்குகளை மட்டுமே குறிவைத்து தாக்குதல்களை படையினர் மேற்கொண்டு வருகின்றனர். இவற்றுக்குள் அப்பாவி மக்கள் சிக்கி விடாமலிருப்பதில் உரிய கவனம் செலுத்தப்பட வேண்டுமென பாதுகாப்பு அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.