வன்னி மக்களின் பாதுகாப்பையும் சுதந்திரமான நடமாட்டத்தையும் மனித கௌரவத்தையும் பாதுகாக்குமாறு மனிதாபிமான அமைப்புகளின் இணையம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பு நேற்று வியாழக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது;
வன்னியிலுள்ள மக்களின் மனித கௌரவமும் அவர்களின் தேவைகளைப் பெற்றுக் கொள்ளும் உரிமையும் பாதுகாப்பும் மதிக்கப்பட வேண்டும்.
சுதந்திர நடமாட்டம் என்பது உள்நாட்டில் இடம்பெயர்ந்த அனைவருக்குமான சர்வதேச அடிப்படை கொள்கை விதி என்பதற்கமைய, வன்னியிலுள்ள மக்கள் பாதுகாப்பாக வெளியேறி வவுனியாவுக்கு வர அரசாங்கம் விடுத்துள்ள "மனிதாபிமான வழி'யானது வன்னி மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை விநியோகிப்பதற்கான மார்க்கமாகவும் அமைவது அவசியமாகும்.
தேசிய சட்டங்கள் மற்றும் சர்வதேச சாசனங்களுக்கு இணங்க வன்னியிலுள்ள சகல மக்களுக்கும் அத்தியாவசிய பொருட்களையும், சேவைகளையும் வழங்குவதாக இருக்க வேண்டும்.
அத்துடன், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட செயலகங்களினூடாக வன்னியிலுள்ள மக்களுக்கு அரசாங்கம் வழங்கி வந்த மனிதாபிமான உதவிகள் தொடரப்பட வேண்டும்.
இதேநேரம், உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களுக்கான இணைப்பும் சந்திப்பும், நம்பிக்கையை கட்டியெழுப்புதல் போன்றவற்றுடன் தொடர்ச்சியான சந்திப்புகளை நடத்தும் 5 உப குழுக்களைக் கொண்ட மனிதாபிமான உதவிகளுக்கான ஆலோசனைக் குழுவானது பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான இணைந்த நடவடிக்கைகளை வெளிப்படையான கலந்துரையாடல் மற்றும் பொதுவான பொறுப்பு என்பதன் அடிப்படையில் தொடர வேண்டுமென நாம் நம்புகிறோம்.