* பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங் சென்னையில் வலியுறுத்தல்
இலங்கை அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் பேச்சுவார்த்தை மேசைக்கு செல்வதற்கு பாரிய பங்களிப்பினை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு முன்னணி அரசாங்கம் வழங்கவேண்டுமென இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா அழைப்பு விடுத்திருக்கிறது.
இலங்கை அரசையும் விடுதலைப்புலிகளையும் பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டு வருவதற்கு இந்திய அரசாங்கம் பாரிய பங்களிப்பை வழங்க வேண்டுமென பாரதிய ஜனதாவின் தலைவர் ராஜ்நாத்சிங் சென்னையில் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.
அதேசமயம் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றிருக்கும் நளினியை பிரியங்கா காந்தி சிறைச்சாலைக்கு சென்று சந்தித்தமை காங்கிரஸ் கட்சி வழமையாக அடிக்கடி மேற்கொள்ளும் வேலைகளில் ஒன்றேயென்றும் ராஜ்நாத்சிங் கூறியுள்ளார்.
கடந்த ஏப்ரல் 19 இல் வேலூர் சிறைச்சாலையில் நளினியை பிரியங்காகாந்தி சந்தித்திருந்தார். பிரியங்காவின் சந்திப்பானது காங்கிரஸால் அடிக்கடி மேற்கொள்ளப்படும் இராஜதந்திரமெனவும் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். ஆயினும் இது தொடர்பாக அவர் விபரிக்கவில்லை.
இதேவேளை அமெரிக்காவுடன் அணுவாயுத உடன்படிக்கையில் இந்தியா கைச்சாத்திடுவதற்கு முன்னுரிமை கொடுத்து இந்திய முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிராகேஸ் மிஸ்ரா கருத்து தெரிவித்திருந்தமை அவரின் தனிப்பட்ட கருத்தென ராஜ்நாத் கூறினார். அதேசமயம் இந்த உடன்படிக்கை தொடர்பான பாரதீய ஜனதா கட்சியின் எதிர்ப்பு நிலைப்பாட்டில் மாற்றம் இல்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாக்கு நீரிணையில் இராமர் அணைக்கு சேதம் ஏற்படாமல் சேது சமுத்திரத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கு பாரதீய ஜனதா சாதகமான நிலைப்பாட்டையே கொண்டிருக்கின்றது.
இராமர் அணையின் பாதுகாப்பு கருதி திட்டத்தை தி.மு.க.தலைவர் கருணாநிதி மாற்றி அமைக்க முன்வர வேண்டும் என்றும் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
அதேசமயம் பணவீக்க அதிகரிப்பானது உலகளாவிய ரீதியில் ஏற்பட்டிருக்கும் விடயமென நிதியமைச்சர் பி.சிதம்பரம் தெரிவித்திருந்தமையை நிராகரித்த ராஜ்நாத் சிங், அமெரிக்காவில் 3 சதவீதமாகவும் ஏனைய அபிவிருத்தியடைத்த நாடுகளில் 4 சதவீதமாகவும் பணவீக்கம் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது இவ்வாறிருக்க ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் விசாரணை மேற்கொண்ட பல் ஒழுங்குமுறை கண்காணிப்பு முகவர் நிலையத்தின் விசாரணையின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையை மத்திய அரசாங்கம் வெளியிட வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
இந்த முகவர் அமைப்பானது ராஜீவ் படுகொலை வழக்கு சதி தொடர்பாக விசாரணை மேற்கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.