* இன்று ரணில், ஹக்கீம் வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் சந்திப்பு
கிழக்கில் வன்முறைகள், முறைகேடுகள் கட்டவிழ்த்து விடப்பட்ட போதிலும் தேர்தல் முடிவுகளை தாம் நிச்சயமாக தோல்வியாகவே கருதவில்லையென தெரிவித்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், வன்முறைகளும் மோசடிகளும் தாண்டவமாடிய இத்தேர்தல் முடிவுகளை ஆட்சேபித்து நீதிமன்றம் செல்லப்போவதாகவும் அநீதிக்கெதிராக மக்களை அணிதிரட்டப்போவதாகவும் தெரிவித்தார்.
மேலும் அரசாங்கத்தின் அராஜகச் செயற்பாடுகள் குறித்து சர்வதேச சமூகத்தின் உடனடிக் கவனத்திற்கு கொண்டுவருவதுடன், அதனொரு கட்டமாக இன்று திங்கட்கிழமை கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்களை தானும் ரணில் விக்கிரமசிங்கவும் சந்திக்கவிருப்பதாகவும் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது;
கிழக்கின் 3 மாவட்டங்களிலும் அமைச்சர்களும் குண்டர்களும் தமது அதிகார, ஆயுதப் பலத்தைப் பிரயோகித்து தேர்தல் மோசடியிலீடுபட்டனர். தமிழ் பிரதேசங்களிலிருந்து வாக்குச் சாவடிகளை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஆயுதப் பிரினர் கைப்பற்றி வாக்குப் பெட்டிகளை கள்ள வாக்குகளினால் நிரப்பினர்.
வாக்குச்சாவடிகளில் ஐ.தே.க.முகவராக தமிழர்கள் எவருமே செயற்பட அனுமதிக்கப்படவில்லை. தேர்தல் அதிகாரிகள் அமைச் சர்களுக்கும் ஆயுதங்களுக்கும் அஞ்சி நடுங்கிக்கொண்டிருந்தனர். பொலிஸார் பக்கச்சார்புடன் செயற்பட்டனர்.
பொலிஸ் அதிகாரிகள் தமது தொலைபேசி இணைப்புகளை துண்டித்துவிட்டு ஓடி ஒளித்திருந்தனர். பிரதியமைச்சர் பாயிஸினால் தாக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் வைத்தியசாலையில் காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவசரமாக மூதூரிலிருந்து இடமாற்றப்பட்டுள்ளார்.
வாக்குச் சாவடிகளிலிருந்த அதிகாரிகள் வாக்குச்சீட்டுப் புத்தகங்களை அமைச்சர்களுக்கு அள்ளிக்கொடுத்து, கள்ளவாக்கு மோசடிக்கு உதவியுள்ளனர்.
இத்தனை அராஜகங்களுக்கு மத்தியிலும் மக்கள் எமக்கு ஆதரவு நல்கினர். தமிழ், முஸ்லிம் பிரதேசங்களில் எமக்கு அதிகளவிலான மக்கள் ஆணைகிடைத்தது. எனவேதான் நான் உறுதியுடன் கூறுகிறேன். இத்தேர்தல் முடிவுகள் எமக்கு தோல்வியே அல்ல.
எனினும் இங்கு மாபெரும் அநீதி நிகழ்ந்துள்ளது. இதற்கெதிராக மக்களை அணி திரட்டிப் போராடுவோம். அக்கிரமம், மோசடி உள்ளிட்ட அராஜகங்களை கண்டித்து நீதிமன்றம் செல்வோம். எம்மிடம் சகல ஆதாரங்களுமேயுண்டு.
அராஜகத் தேர்தல் முடிவுகள் குறித்து சர்வதேச சமூகத்திற்கு முறையிடுவோம். இன்று ஐ.தே.க.தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்களுக்கு விளக்கிக்கூறி அரசாங்கத்திற்கு அழுத்தம்கொடுக்க வலியுறுத்துவோம்.
முதலமைச்சர் பதவியை பகடைக் காயாகவும், தமிழ், முஸ்லிம் சமூகங்களை துருவப்படுத்தும் நடவடிக்கைக்கும் பயன்படுத்த முயற்சிகள் இடம் பெறும் சந்தர்ப்பம் உண்டு இதனையிட்டு கவலையடைகிறேன். தமிழ், முஸ்லிம் சமூகம் இது குறித்து போதிய விழிப்புடனும், எச்சரிக்கையுடனும் செயற்படுவது அவசியம்.
தமிழ், முஸ்லிம் மக்களின் ஒற்றுமை கருதி கடந்த காலங்களில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டேன் சமூகங்களுக்கான எனது தியாகம் தொடரும் என்றார்.