* நேற்று காலையுடன் முடிவடைந்ததாக படைத்தரப்பு தெரிவிப்பு
வன்னியில் கடந்த 36 மணிநேரம் நடைபெற்ற கடும் சமர் நேற்று வியாழக்கிழமை காலையுடன் முடிவுக்கு வந்துள்ளதாக படையினர் தெரிவித்துள்ளனர்.
வன்னேரிக்குளம், ஆண்டான்குளம், அக்கராயன்நகர் மற்றும் நாச்சிக்குடாவுக்கு வடக்கே கடந்த 36 மணிநேரம் நடைபெற்ற கடும் மோதல்களே நேற்றுக் காலையுடன் முடிவுக்கு வந்துள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
இந்த மோதல்களில், படையினரின் முன்னேற்ற முயற்சிக்கு எதிராக பதில் தாக்குதலில் ஈடுபட்ட புலிகளில் மேலும் 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தப் பகுதிகளில் அதிரடிப் படை ஐ மற்றும் ஐஐ படையணிகள் முன்னேற்ற முயற்சிகளில் ஈடுபட்டிருந்தன.
ஆண்டான்குளம் மற்றும் அக்கராயன் நகரில் புதன்கிழமை நடைபெற்ற கடும் மோதல்களில் மேலுமிரு படையினர் கொல்லப்பட்டும் பத்துக்கும் மேற்பட்ட படையினர் காயமடைந்துமுள்ளனர்.
கிளிநொச்சியில் தங்கள் படைப்பலத்தை நிரூபிப்பதற்காக இரு தரப்பும் கடும் சமரில் ஈடுபட்டன. இந்த மோதலில் வன்னேரிக்குளம் பகுதியில் நடைபெற்ற சமரில் புலிகளின் புலனாய்வுப் பிரிவு முக்கியஸ்தர்களில் ஒருவரான லெப்.கேணல் நீலவனும் கொல்லப்பட்டதாக புலிகளின் தொலைத் தொடர்புத் தகவல்களை இடைமறித்துக் கேட்டபோது தெரியவந்துள்ளது.
புதன்கிழமை வன்னேரிக்குளம் பகுதியில் கடும் சமர் நடைபெற்றுள்ளது. இந்தச் சமரில் புலிகளுக்கு பலத்த சேதமேற்பட்டுள்ளது. முன்னேறிச் செல்லும் படையினர் மேலும் மேலும் தாக்குதலைத் தொடுத்து வருகின்றனர்.
இதேநேரம், புதன்கிழமை வவுனியா, மணலாறு பகுதிகளிலும் கடும் சமர் நடைபெற்றுள்ளது.
வவுனியா பாலமோட்டை மற்றும் நாவற்குளம் பகுதிகளில் கடும் சமர் நடைபெற்றுள்ளது. இவ்விரு பகுதிகளிலும் காலையும் முற்பகலும் பிற்பகலும் இந்த மோதல்கள் நடைபெற்றுள்ளன.
மணலாறில் ஆண்டான்குளம் பகுதியில் காலை 9.15 மணிமுதல் மாலை 3.40 மணிவரை கடும் சமர் நடைபெற்றுள்ளது.
மற்றொரு பகுதியில் முற்பகல் 11 மணி முதல் மாலை 5 மணிவரை கடும் சமர் நடைபெற்றுள்ளது. இதில் இராணுவத் தரப்பில் ஒருவர் காணாமல் போனதுடன், நால்வர் காயமடைந்துள்ளனர்.
படை நகர்வு முறியடிப்பு
இதேவேளை, மணலாறு சிலோன் தியேட்டர் பகுதியில் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு முயற்சியை தாங்கள் கடும் பதில் தாக்குதல் மூலம் முறியடித்துள்ளதாக புலிகள் தெரிவித்துள்ளனர்.
ஐந்து மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்தச் சமரில் கொல்லப்பட்ட படையினரில் ஒருவரது சடலத்தையும் இராணுவப் பொருட்களையும் கைப்பற்றியுள்ளதாக புலிகள் தெரிவித்துள்ளனர்.