சகல சமூகங்கள் மத்தியில் சமாதானம், பரஸ்பர புரிந்துணர்வு,சகிப்புத்தன்மை என்பவற்றைக் கட்டியெழுப்பவும் ஸ்திரப்படுத்தவும் சகலரும் பங்களிப்பு வழங்க வேண்டுமென மீலாதுன் நபிதின வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி மகிந்த ராஷபக்ஷ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;முஹம்மது நபி பிறந்த தினமான இன்றைய தினம் முஸ்லிம்கள் அவரின் போதனைகளை நினைவுகூரும் ஒரு தினமாகும்.சமாதானம், நல்லிணக்கம்,கருணை, சுயநலமின்மை, தர்மம் என்பன போன்ற பல உயர் விழுமியங்களை முஹம்மது நபியவர்கள் தனது போதனைகள் மூலம் முன்வைத்தார்.
இலங்கையில் மீலாதுன் நபி விழா தேசிய நிகழ்வாகக் கொண்டாடப்படுகின்றது.இம்முறை இந்தத் தேசிய கொண்டாட்டங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடாவில் இடம்பெறுகின்றது.அங்குள்ள முஸ்லிம் மக்களின் சமய மற்றும் கலாசாரச் செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளித்து இந்தக் கொண்டாட்டங்கள் இடம்பெறுகின்றன. இலங்கை முழுவதும் ஜனநாயகம் மீள ஸ்தாபிக்கப்பட்டு சமாதானமும் நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் அமைதியான சூழலில் இம்முறை முஸ்லிம்கள மீலாதுன் நபியைக் கொண்டாடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
சகிப்புத்தன்மை,புரிந்துணர்வு,நல்லிணக்கம் என்பவற்றுடன் கூடிய புதியதோர் இலங்கையைக் கட்டியெழுப்ப முஹம்மது நபியினால் போதிக்கப்பட்ட சகோதரத்துவம் கைகொடுக்கும் என நாம் எதிர்பார்க்கின்றோம். இதன் மூலம் இலங்கையின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு உதவமுடியும்.
இன்றைய விசேட தினத்தில் இலங்கை பூராகவுமுள்ள முஸ்லிம்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். அத்தோடு சமாதானம்,பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் சகிப்புத்தன்மை என்பவற்றை சகல சமூகங்கள் மத்தியிலும் கட்டியெழுப்பவும் அவற்றைச் ஸ்திரப்படுத்தவும் தீவிர பங்களிப்பை வழங்குமாறும் கேட்டுக் கொள்வதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.